கொரோனா இல்லையென்றால்... டாஸ்மாக் கடைக்கு எதிராக நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் -ராமதாஸ்
சென்னை: கொரோனா மட்டும் இல்லையென்றால் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக தாமே போராட்டத்தில் குதித்திருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதா என்பது பற்றி பொதுக்குழு தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணம்... ரூ. 90,000 நன்கொடை... யாசகர் மதுரை பூல்பாண்டியனுக்கு விருது!!
தேர்தல் வாக்குறுதி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் தவறில்லை என்றும் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தான் அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணி மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா என அந்த நெறியாளர் கேட்டதற்கு இந்த கேள்வியை நீங்கள் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும் என லாவகமாக விடையளித்தார்.
ஸ்டாலின் மீது குறை
கருணாநிதியிடம் இருந்த பக்குவம் மு.க.ஸ்டாலினிடம் இல்லை என்றும் கருணாநிதிக்கு ஸ்டாலின் நிகராகமாட்டார் எனவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். தனது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்துச்சொல்லியது அரசியல் நாகரீகமான நிகழ்வு என்றும் இந்த கலாச்சாரம் வட இந்தியாவை போல் தமிழகத்திலும் தொடர வேண்டும் என்பதே தமது விருப்பம் என ராமதாஸ் கூறியுள்ளார்.
பொதுக்குழு
வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, பாமக பொதுக்குழு இதுப்பற்றி முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார். அரசியலை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என அவர் கூறினார். சமூக வலைதளங்களில் பாமக மீதான விமர்சனங்களை தங்கள் கட்சி இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்றும் பதிலுக்கு விமர்சனங்கள் மூலம் தாறுமாறாக கிழித்துவிடுவார்கள் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம்
மதுவுக்கு எதிரான கொள்கையில் பாமக உறுதியோடு இருப்பதாகவும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கொரோனா பரவல் மட்டும் இல்லாமல் இருந்தால் தாமே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் குதித்திருப்பேன் எனத் தெரிவித்திருக்கிறார்.