மகன் அன்புமணியை அமைச்சராக்கணும்... அதுக்கு தான் குட்டிக்கரணம்... பாமகவை விளாசிய நாஞ்சில் சம்பத்
சென்னை:மகனை அமைச்சராக்கவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி அலைவரிசைகள் திடீரென மாற்றம் பெற தொடங்கி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்துவிட்டன. 48 மணி நேரத்தில் கூட்டணி கட்சிகள் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறிய அதிமுகவிலும் கூட்டணி இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை.
திமுகவும் மெதுவாக... பேச்சுவார்த்தையை ஆரம்பித்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் என்று கூட்டணியை உறுதியாக்கி இருக்கிறது. தோழமை கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது.
பாஜக, பாமக
அதிமுகவில் யாரும் எதிர்பாராத வண்ணம் பாமக சென்று உட்கார்ந்து கொண்டு 7 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வந்துவிட்டது. பாஜக 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டுள்ளது.
கடும் விமர்சனம்
கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து திமுக உள்பட ஒரு சில கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. மக்களும் இருவேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.
நாஞ்சில் விமர்சனம்
இந் நிலையில்... தமது மகனை மத்திய அமைச்சராக்கவே அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமக இசைந்துள்ளார் என்று நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவித்து இருப்பதாவது:
பாமக குட்டிக்கரணம்
எந்த சூழ்நிலையிலாவது... மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும். அதற்காக தான் ராமதாஸ் மெகா குட்டிக்கரணம் போட்டுள்ளார்.
விளையாட்டு பிள்ளை
பாஜகவுடன் கூட்டணி வைத்து தங்களை தாங்களே விற்றுக் கொண்ட அதிமுக அதை கூட்டணி என்று கூறுகிறது. அரசியலில் டிடிவி தினகரன் ஒரு விளையாட்டு பிள்ளை.
அறிவார்ந்த அரசியல்
அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால்.. தமக்கு தானே சுவற்றில் மோதிக் கொண்டு காயம்பட்டு கொள்கிறார் என்று கூறினார்.
கருத்து முரண்பாடு
திமுக, மதிமுக, அதிமுக என பல முக்கிய கட்சிகளில் இருந்த நாஞ்சில் சம்பத் கடைசியாக டிடிவி தினகரனின் அமமுகவில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். ஆனால்.. ஒரு கட்டத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி இலக்கிய மேடைகளில் களமாடி வருகிறார்.
சினிமாவில் சம்பத்
அண்மையில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அதில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் பேசப்பட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.