ஆஹா என்ன நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டில் விருந்து அளிக்க உள்ளதாக சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது பாமக. திமுகவைவிடவும் கூட கடுமையாக விமர்சித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் இந்த நிலையில் இரு கட்சிகளும் அமைத்துள்ள கூட்டணி பொதுவெளியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அன்புமணி பதிலளிக்கிறார்
இந்தக் கூட்டணி எதற்காக உருவாக்கப்பட்டது, உங்களது பழைய குற்றச்சாட்டுகள் எல்லாம் என்னவாயிற்று.. என்பது குறித்த எந்த கேள்விக்கும் இதுவரை பாமக தலைவர் ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் பதிலளிக்கவில்லை. அன்புமணி ராமதாஸ் இது குறித்து பின்னர் விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு அதிமுக அரசு, மீது பாமக தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்துள்ளனர்.
மோதல்கள் பலவகை
அதிலும் தர்மபுரி லோக்சபா உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்று காட்டமாக கூறியவர், அமைச்சர் அன்பழகன். இப்படி இரு தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் உள்ள நிலையில், இப்போது இரு கட்சி தொண்டர்களும் எவ்வாறு இணக்கமாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கம்
இது இருக்கத்தை தணிப்பதற்காக, ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு, நாளை விருந்து அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக மற்றும் பாமக கூட்டணி உருவான தினத்தன்று எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில், தேனீர் விருந்து அளித்துள்ளார். மேலும், ஐயா உங்களை போன்ற மூத்தவர்கள் ஆலோசனை நமது கூட்டணிக்கு அவசியம் என மிகவும் பவ்யமாக கூறியுள்ளார்.
ராமதாஸ் வீட்டில்
இதையெல்லாம் பார்த்து நெகிழ்ந்துள்ளார் ராமதாஸ். எனவே, தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார். எனவே, நாளை ராமதாஸ் வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலமான விருந்து
அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் நடுவே இணக்கம் இருந்தால்தான் தொண்டர்களுக்கு நடுவேயும் இணக்கம் இருக்கும் என்பதுதான் இந்த விருந்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. எனவே விருந்து மிகவும் பலமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.