தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும்.. ராமதாஸ் கருத்து
சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் சமூகநீதிக்கு ஆபத்தான அம்சங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், மருத்துவப் படிப்புகள் முறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ராமதாஸ் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவுகள் ஏராளமாக உள்ளன. ஆனாலும் அவற்றில் முதன்மையானது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படும் என்பது தான்.
இப்போதுள்ள மருத்துவக்குழு விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மாற்றப்படவுள்ளது.
அதுவும் அனைத்து மருத்துவ இடங்களுக்கும் மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்காமல், தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் பாதிக்கு மட்டும் தேசிய மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்கும். மீதமுள்ள இடங்களின் கட்டணத்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று காட்டப்பட்டுள்ள சலுகையால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.
மேலும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை மாநில அரசால் நிர்ணயிக்க முடியாது. 50% இடங்களுக்கான கட்டணத்தை மருத்துவ ஆணையம் நிர்ணயிக்கும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இனி வரும் காலங்களில் தனியார் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கான கட்டணமாக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்படலாம்.
தனியார் கல்லூரிகளில் 65% இடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஓரளவு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் மருத்துவம் படிக்க முடிகிறது. அதே நேரத்தில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப் படுவதால் அங்கு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் சேர முடிவதில்லை.
மாறாக, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த பணக்கார மாணவர்கள் மட்டும் தான் தங்களிடம் உள்ள பணத்தைக் கொட்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேருகின்றனர். இனிவரும் காலங்களில் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.25 லட்சம் என்ற அளவில் தான் இருக்கும் என்பதால் ஏழைஇ நடுத்தர மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் அவர்களால் மருத்துவப் படிப்பை படிக்க முடியாது.
மாறாக பணக்கார மாணவர்கள் நீட் தேர்வுகளில், இதுவரை எடுத்த மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் பணத்தைக் கொட்டி மருத்துவம் படிக்க முடியும். இதுவா சீர்திருத்தம்.... இதுவா சமூகநீதி?
மத்திய அரசு கொண்டு வந்த நீட் சட்டமாக இருந்தாலும், கட்டண நிர்ணய முறையாக இருந்தாலும் அவை ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைப்பவையாகவே உள்ளன. இந்த நிலையை மாற்ற மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைப்பதுடன், நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.