சூடு பிடித்த பாமக ராமலிங்கம் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்டவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை
சென்னை: பாமகவை சேர்ந்த ராமலிங்கம், கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஃபரூக் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகர். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி, மாலை, பணிகளை முடித்துவிட்டு, தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராமலிங்கத்தை இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளையும் வெட்டி கொலை செய்தனர்.
இதே நாள் காலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்ததை தட்டி கேட்டு ராமலிங்கம் பேசியதாக கூறி, ஒரு வீடியோ வைரலாக சுற்றி வந்தது. இந்த அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கொலை தொடர்பாக 11 பேரை கைது செய்தனர்.
ஜோதிமணியை இப்படியா நிற்க வைப்பது.. உட்கார வைத்திருக்கலாமே.. கரூர் காங்கிரஸில் புலம்பல்!
இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. என்.ஐ.ஏ விசாரணைக்கு கோரிக்கைவிடுத்தன. இதையடுத்து என்.ஐ.ஏவிற்கு விசாரணை மாற்றப்பட்டது. ராமலிங்கத்தின் மகன் மற்றும் மனைவியிடம் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து கடந்த 2 ஆம் தேதி திருச்சி பாலகரையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது ஃபரூக் வீட்டில் என்ஐஏ சோதனையை ஆரம்பித்துள்ளது. திருச்சி மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியில் உள்ள முகமது ஃபரூக் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.