நிவர் புயல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?.. மழை மனிதர் ரமணன் தரும் தகவல்
சென்னை: நிவர் புயல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயல் சென்னை- காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கவுள்ளது. இதையொட்டி நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றன. விஐபிக்கள் இருக்கும் வீடுகள் அருகே தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
நிவர் புயல் வருகிறது.. இங்குதான் மழை பெய்யும்.. அதுவும் அதிதீவிர கனமழை..வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை
வட பகுதி
இந்த நிவர் புயல் குறித்து கணிக்க முடியாத சூழல் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த புயல் குறித்து சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில் புயல் எங்கே கரையை கடக்கிறதோ அது கடப்பதற்கு வடக்கு பகுதியில்தான் மழை அதிகமாக இருக்கும்.
காரைக்கால்
தென் பகுதிகளில் மழை வரவே வராது. ஏனெனில் மேல் திசை காற்றும் நிலக்காற்றும் வீசும். உதாரணமாக காரைக்கால்- மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சொல்லியுள்ளார்கள். காரைக்கால் என வைத்துக் கொண்டால் நாம் வடக்கே தான் இருக்கிறோம்.
தொலைத்தொடர்பு
இந்த மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என பார்க்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் என்பதால் அவர்கள் மேடான பகுதிக்கு வந்து விட வேண்டும். காற்றின் வேகம் காரணமாக தொலைத்தொடர்பு உள்ளிட்டவை பாதிக்கக் கூடும்.
உலர் உணவு
காற்றடித்தால் ஜன்னல்களை மூடிவிடுங்கள். மின்சாரமும் தானாகவே துண்டிக்கப்படும். உலர் உணவு, டார்ச், தண்ணீர், ரேடியோ உள்ளிட்டவை வாங்கி வைத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். பயிர்களுக்கு காப்பீடு எடுத்து வைத்திருக்க வேண்டும்.