எந்த புயல் வந்தாலும் கடலூரை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன்?.. ரமணன் விளக்கம்
சென்னை: எந்த புயல் வந்தாலும் கடலூரை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன் என்பது குறித்து சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து ரமணன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஏராளமான புயல்கள் கடலூர் அருகே கரையை கடந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறீர்கள்.
இங்கு புயல் தாக்குவதற்கு என்பதற்கு வானியல் ரீதியில் பிரத்யேக காரணம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. வளி மண்டலம் நகருகிறது. மேல் நோக்கி செல்லும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ அந்த திசையில் புயல் வருகிறது. மேல் திசை காற்று மட்டுமே அளவுகோல்.
தெற்கு திசை
மேலடுக்குகளில் இருந்து காற்று தெற்கு திசையில் வீசினால் அந்த புயல் வடக்கு நோக்கி நகரும். தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசினால் வடமேற்கை நோக்கி நகரும். இயற்கை சீற்றங்களை நாம் கையாளக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புயல்கள்
இயற்கை பேரிடர் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் உயிரிழப்பையும் பொருட்சேதத்தையும் குறைக்கலாம். அண்மையில் நீலம், கஜா, வர்தா, தானே, ஓக்கி ஆகிய புயல்களை ஒன்றேகால் வருடத்துக்கு ஒரு முறை சந்தித்துவிட்டோம். இதை வைத்து அடுத்தடுத்த ஒன்றேகால் ஆண்டுக்கு ஒரு முறை புயல் கட்டாயம் வரும் என சொல்ல முடியாது.
2013-ஆம் ஆண்டு
புயல்கள் சில வருடங்கள் வரும். சில வருடங்கள் வராது. 2013-இல் நிறைய புயல்கள் வந்தன. தமிழகத்தை நோக்கி எந்த புயலும் வராமல் வேறு பகுதியை நோக்கி சென்றுவிட்டது. உதாரணமாக அந்தமான் பகுதியில் ஒரு புயல் வந்துவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அது முதலிலேயே வலுப்பெற்றுவிட்டால் அது கண்டிப்பாக ஒடிஸா, வங்கதேசம், மியான்மர் பக்கம் செல்லும்.
நடுக்கோடு
அந்த அளவுக்கு வலுப்பெறவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வலுப்பெறுகிறது என்றால் நம் பகுதியை நோக்கி வரும். பொதுவாக டிசம்பர் மாதம் புயலானது நில நடுக்கோட்டையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில்தான் இருக்கும். அது வலுப்பெற்றால்தான் நம்மை நோக்கி வரும்.
மாமல்லபுரம்
அது வலுப்பெறாவிட்டால் இலங்கையின் தெற்கே சென்றுவிடும். புதுச்சேரி அருகேதான் இந்த நிவர் புயல் கரையை கடக்கப் போகிறது. அங்குதான் அந்த காற்றின் அழுத்தம் மிக குறைந்திருக்கும். மாமல்லபுரம், சென்னை எல்லாம் வடக்கு பகுதியில் இருப்பதால் கடலில் இருந்து காற்று வேகமாக வீசும் . ஈரம் மிகுந்த காற்று நம்மை நோக்கி வரும். மழை நன்றாக பெய்யும். நில அமைப்பு, கட்டட அமைப்பு, மலை அமைப்பு இவை எல்லாம் காற்று வீச ஒரு காரணிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ரமணன்.