ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தட்டி எடுக்கும் - வானிலை மையம்
ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜனவரி வரை நீடித்து வருகிறது. போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு புயல்கள் மூலம் பருவமழை கொட்டித்தீர்த்து விட்டது. ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. அணைகள் நிரம்பி வழிகின்றன. குளங்கள், கண்மாய்கள் குதூகலமாக நிரம்பி மாறுகால் பாய்கின்றன.
விவசாயம் செழித்து காணும் இடமெங்கும் பச்சைப் பசேல் என காணப்படுகிறது. அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக இருக்கும் நிலையிலும் மழை நீடிப்பதால் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. அக்டோபர் 12ஆம் தேதி வரை பருவமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
13ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடவாசலில் 6 செ.மீ மழையும் ராமேஸ்வரம், கொள்ளிடம், நாகப்பட்டினம் பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் , 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.