இதுதான் என் கடைசி பேட்டி.. எனது மரண வாக்குமூலம்.. இனி பேச மாட்டேன்.. ராமர் பிள்ளை பகீர்!
தற்கொலை செய்து கொள்ள போவதாக ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: "இதுதான் என் கடைசி பேட்டி, இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன், இதை மரண வாக்குமூலம் என்றுகூட சொல்லலாம்" என்று பேசி பகீர் வீடியோ வெளியிட்டுள்ளார் ராமர் பிள்ளை!
மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு' என்ற தலைப்பில் இந்த வீடியோ பதிவு வெளியாகி உள்ளது
இந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ''என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன். இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி தந்திருக்கிறேன்.
பெட்ரோல் பார்முலா
என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்முலாவை சமர்ப்பிக்க வேண்டும்.
தூக்கு தண்டனை தாங்கள்
ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
உயிருடன் இருப்பேனா?
நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.
உயிர் பிச்சை
மரணத்தின் வாயிலிலிருந்து தமிழிசை அவர்களையும், திரு.பொன்.ராதாகிருஷ்ணனையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், 5 தினங்களுக்குள் நீங்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, திரு. முரளி மனோகர் ஜோஷியை தொடர்புகொண்டு உண்மையை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஏழை கண்டுபிடித்தது உண்மைதான் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும். நான் உயிர் பிச்சை கேட்கிறேன்.
கண் கலங்குவீர்கள்
இந்த வீடியோ பார்த்துவிட்டு காவல்துறை நண்பர்கள் என்னை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி'' என்று கூறியுள்ளார்.
கவுன்சிலிங்
ராமர் பிள்ளையின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பிள்ளையை உடனடியாக மீட்டு அவருக்கு உரிய கவுன்சிலிங் தர வேண்டும் அல்லது அவரது தரப்பு வாதத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளன.