சூரி போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டை நாடிய மாஜி டிஜிபி ரமேஷ் குடவாலா!
நடிகர் சூரி வழக்கு தொடுத்தால், முன்ஜாமீன் கோரியுள்ளார் ரமேஷ் குடவாலா
சென்னை: நடிகர் சூரி தெரிவித்த, ரூபாய் 2.70 கோடி மோசடி புகாரில் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார் ஓய்வுபெற்ற கூடுதல் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவுமான ரமேஷ் குடவாலா.. சூரியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ரமேஷ் குடவாலா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
வீர தீர சூரன் என்ற படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், சூரி காமெடி நடிகராகவும் நடிக்க அக்ரிமெண்ட் போடப்பட்டிருந்தது.. அதில் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், பேசியபடி பணத்தை தயாரிப்பாளர் அளிக்கவில்லை என தெரிகிறது.
அதனால் சூரி, இந்த விவகாரத்தை ஓய்வுபெற்ற கூடுதல் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவுமான ரமேஷ் குடவாலாவிடம் கொண்டு சென்றார்.. அதற்கு, சம்பள பாக்கிக்கு பதிலாக, சிறுசேரி அருகில் நிலம் ஒன்று இருப்பதாகவும் இந்த பணத்துடன் மேலும் சில கோடிகள் கொடுத்தால் அதனை முடித்து தருவதாகவும் ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் சூரியிடம் பேசியிருக்கிறார்கள்.
பேசியபடியே 4 தவணைகளாக 3.10 கோடி ரூபாயை அவர்களிடம் தந்திருக்கிறார் சூரி. இடமும் வாங்கியாகி விட்டது.. ஆனால், வாங்கிய பிறகுதான் அந்த இடத்தில் சிக்கல் இருப்பதாக சூரிக்கு தெரியவந்தது.. அதனால் இடத்தை பெற்றுக்கொண்டு, தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு 40 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்த அவர்கள், மீதமுள்ள 2.70 கோடி ரூபாயை தரவில்லை.
இதனால், சூரி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அடையாறு ஸ்டேஷனில் புகார் தந்தார்.. ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சூரி வழக்கு தொடுத்தார்.. அப்போது இதனை விசாரித்த கோர்ட், அவர்கள் 2 பேரின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் வழக்கும் பதிவாகி, சென்னை குற்றப்பிரிவு போலீசுக்கும் மாற்றப்பட்டது.
இதனிடையே, குற்றப் பிரிவிலிருந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சூரி தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.. சாட்சிகள் ஆதாரங்களை அழிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால், இந்த விசாரணையை சிபிஐக்கோ, மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கோ மாற்றம் செய்ய வேண்டும் என்று சூரி கேட்டுக் கொண்டிருந்தார்.
புகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ
இந்த விஷயம் குறித்து விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "சூரியின் புகார் எனக்கு ஷாக்-ஆக இருக்கு.. என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்த போது மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. உண்மையில் சூரிதான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும்" என்று அவர் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
இப்படி பரபரப்புகளுக்கு நடுவில்தான் சூரி, அதாவது அக்டோபர் 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் சூரி திடீரென சந்தித்தார்.. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்க சூரி சந்தித்தார் என்றும் காரணம் சொல்லப்பட்டது.
எனினும், சூரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல்துறை தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை ஹைகோர்ட்டில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்... இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.