பிறை தெரிந்தது.. இன்று ரமலான் பண்டிகை.. கட்டித் தழுவி வாழ்த்து கூறிய இஸ்லாமியர்கள்
சென்னை: பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் ஆகும். இந்த மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிப்பர். 30-ஆவது நாளில் பிறை தெரிந்தவுடன் அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று.
இந்த பண்டிகை ஈகை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் நேற்று முன் தினமே பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் நேற்றே ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று பிறை தெரிந்ததால் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்தார். பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்து கூறி வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.