நகரங்களில் 100 நாள் வேலை... சுகாதார துறைக்கு ரூ5,000 கோடி: தமிழக அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை
சென்னை: நகர்ப்புறங்களிலும் கிராமங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டம் போல ஒரு வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா லாக்டவுனால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழு மாநிலம் முழுவதும் பல்வேறு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டும், பலமுறை ஆலோசனை நடத்தியும் வந்தது. இந்த நிலையில் ரங்கராஜன் குழு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 275 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் ரங்கராஜன் பேசியதாவது:
கொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா!
தமிழக பொருளாதார வளர்ச்சி
கொரோனா லாக்டவுனால் தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. தற்போது பொருளாதார நிலைமை மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. 2020-21-ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 1.71% ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு கணக்கீட்டின் படி பொருளாதாரத்தில் தேக்கநிலை இருக்கும் என தெரியவந்துள்ளது.
மின்நுகர்வு அதிகரிப்பு
தமிழகத்தில் மின்நுகர்வானது கொரோனா லாக்டவுனுக்கு முந்தைய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் வரிவிகிதங்களை உயர்த்த வாய்ப்பு எதுவும் இல்லை. வரிகளைக் குறைக்க வேண்டும் என்றுதான் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சுகாதார துறைக்கு ரூ5,000 கோடி
தமிழக அரசிடம் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து 2 பிரிவுகளாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சுகாதாரத்திட்டங்களுக்கு மேலும் ரூ5,000 கோடி செலவிடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செலவிடுதலும் பொருளாதார நடவடிக்கை
நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுப்பதை நீட்டித்தல் போன்ற குறுகிய கால திட்டப்பணிகள் மற்றும் கிராமபுற, நகர்புறங்களில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது எப்படி என்பது தொடர்பான பரிந்துரைகளை கொடுத்துள்ளோம். கட்டுமான தொழிலாளர் நலநிதியத்தில் ரூ3,200 கோடி நிதி உள்ளது. இந்த 3,200 கோடி ரூபாயையும் முழுமையாக செலவிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செலவிடுதல் என்பதும் கூட ஒருவகையில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைதான். இந்த பரிந்துரைகளில் மிக முக்கியமானது, கிராமப்புறங்களில் எப்படி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலைதிட்டம்) செயல்படுத்தப்படுகிறதோ அதேபோல் நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.