புதுச்சேரியில்.. காங்கிரஸுடன் மோதுகிறது என். ஆர். காங்கிரஸ்.. அதிமுகவுடன் டீல் ஓகே!
சென்னை: புதுச்சேரி லோக்சபா தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக விட்டுக் கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியுடன். என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் நேரடி மோதலலில் குதிக்கவுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்ஆர் காங்கிரஸ் தலைவருமான என். ரங்கசாமி இன்று இரவு வருகை தந்தார். மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த ரங்கசாமி தெரிவித்தார். ஆனால் ராத்திரியில் வந்து அவர் சந்தித்துப் பேசியதால் இது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையாக கருதப்பட்டது.
புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட என். ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கடந்த 2014 பொதுத் தேர்தலின்போது என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வலுவான நாராயணசாமியை என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்து அதிர வைத்தார்.
இந்த முறையும் தாங்களே போட்டியிடுவோம் என சில நாட்களுக்கு முன்பு ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று இரவு சென்னை வந்த அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார். அப்போது புதுச்சேரியை தங்களுக்கு ஒதுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டதாகவும், சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவம் தருமாறும் ரங்கசாமியிடம் அவர் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் ரங்கசாமி புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.