நல்ல மனம் வாழ்க.. ராணிப்பேட்டையில் ஒரு மனித நேயம்.. மனசார பாராட்டலாமே!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நல்ல மனம் படைத்த ஒருவர் இதுவரை 100 குடும்பங்களுக்குத் தேவையான பொருள் உதவிகளைச் செய்துள்ளார்.
கொரோனாவைரஸால் வாடிய மனங்களை விட வயிறுகள்தான் அதிகமாக உள்ளன. வேலை இல்லை, சம்பளம் இல்லை என்று மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்போர் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் இப்போது உடனடியாக உதவிகள் தேவை.
இதைத்தான் அரசுகளும் செய்கின்றன. கட்சிகளும், பிற தன்னார்வ அமைப்புகளும் செய்கின்றன. நல்ல மனம் படைத்த இவர்களால் ஏதோ ஓரளவுக்குத்தான் பாதிக்கப்பட்டோரை திருப்திப்படுத்த முடிகிறது. இன்னும் இன்னும் ஏராளமான உதவிகள் தேவை.. மிகப் பெரிய அளவில் இயக்கம் போல இதைச் செய்தாக வேண்டிய நிலையில் சமுதாயம் இருக்கிறது.
இப்படி உதவிகள் செய்பவர்களை ஒன்இந்தியா தமிழ் ஊக்குவித்து அவர்களை வெளி உலகுக்கு அடையாளம் காட்டி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு அன்பர் அனுப்பியுள்ள தகவலை உங்களுடன் பகிர்கிறோம்.
இந்த நண்பர் தனது பெயரைப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இவரது தந்தை அப்பகுதியில் தொழில் நிறுவனம் நடத்துகிறார். அரசியலிலும் இருக்கிறார். இதுவரை பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை இவரது தந்தை வழங்கியிருக்கிறார். தொடர்ந்தும் வழங்கி வருகிறார்.
எங்களைப் பார்த்து மேலும் பலர் இது போல உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் இந்த சகோதரர் நம்மிடம் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய மனது இவருக்கு.. நிச்சயம் நண்பா.. உங்களைப் போல மேலும் பலர் பெருகுவர்.. இணைந்து இயலாமையை விரட்டுவோம்.. பாதுகாப்புடன் இருந்து நோயையும் வீழ்த்துவோம். உங்களது சேவையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்தால் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.. இணைந்திருப்போம்.