பாமகவிலிருந்து விலகிய கையோடு தினகரனை சந்தித்தார்.. அமமுகவில் இணைந்தார் ரஞ்சித்!
புதுச்சேரி: பாமகவிலிருந்து விலகிய கையோடு தினகரனை சந்தித்த நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார்.
நடிகர் ரஞ்சித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது. இதை பாமகவினர் யாரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து பாமக நிர்வாகி ராஜேஸ்வரி பிரியா அக்கட்சியிலிருந்து விலகினார்.
விலகல்
பாமகவின் கொள்கைளுக்கு எதிராக அதிமுகவுடன் இணைந்துவிட்டதாக கூறி நடிகர் ரஞ்சித்தும் நேற்று அக்கட்சியிலிருந்து விலகி விட்டார். அப்போது அவர் அன்புமணி மீது ஏராளமான புகார்களை கூறினார்.
விளாசிய ரஞ்சித்
கடந்த வாரம் வரை முதல்வரை கண்டபடி பேசிவிட்டு இன்று அவருடன் கை கோர்த்திருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. 8 வழி சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன் அதில் வழக்கு போட்டார்கள் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா. எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது என விளாசினார்.
சாதி, மதம்
இதையடுத்து இன்று தினகரனை புதுச்சேரியில் சந்தித்த ரஞ்சித் அவரது முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ரஞ்சித் பேசுகையில் இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்துள்ளேன் என அவர் கூறினார்.
இன்ப அதிர்ச்சி
பாமகவிலிருந்து ரஞ்சித் விலகி அமமுகவில் இணைந்தது குறித்து தினகரன் கூறுகையில் இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. தமிழகத்தில் மட்டும் அமமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குகிறோம் என தினகரன் தெரிவித்தார்.