ஆமா, அந்த ரேப்பிட் டெஸ்ட் கதி என்ன.. மடக்கி கேட்ட நிருபர்கள்.. பெரிய விளக்கம் சொன்ன பீலா ராஜேஷ்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய, ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
Recommended Video
இன்று மாலை நிருபர்களுக்கு பீலா ராஜேஷ் அளித்த பேட்டியின்போது, ரேப்பிட் டெஸ்ட் கருவி வருகையில் இன்னும் தாமதம் ஆகுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பீலா ராஜேஷ், ரேப்பிட் டெஸ்ட் கிட், மட்டும் கிடையாது. தமிழகத்தில் சுகாதார அவசர நிலைக்கு தேவைப்படக்கூடிய உபகரணங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வரையறை செய்துள்ள அனைத்து உபகரணங்களும் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதமே தமிழகம்தான் முதன்முறையாக 146 கோடி ரூபாய்க்கு தேவையான மருந்துகளை, கொள்முதல் செய்தோம். 3 அடுக்கு லேயர்கள், அந்த நேரத்தில் 5 லட்சம் இருந்தது. N95 வகை மாஸ்க்குகள், 50,000, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் 40,000 இருந்தன. வென்டிலேட்டர்களை, சர்வீஸ் செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம்.
பிப்ரவரி மாதம் இந்த நோய், வேறு நாடுகளுக்கும் பரவியது. எனவே, தமிழக முதல்வர் மறுபடியும் கொள்முதல் செய்ய உத்தரவிட்டார். மூன்று அடுக்கு முகக் கவசங்கள் ஒன்றரை கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா.. இதுவரை 11 பேர் பலி.. 58 பேர் டிஸ்சார்ஜ்: பீலா ராஜேஷ் பேட்டி
என்95 வகை மாஸ்குகள் 40 லட்சம், அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டன. தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் 21 லட்சம் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டன. இன்றைய நிலையில் மிகவும் தயார் நிலையில் இருக்க கூடிய ஒரு மாநிலம் தமிழகம் மட்டும்தான்.
அமெரிக்காவில் நடந்தது, இத்தாலியில் என்ன நடந்தது என்பது பற்றியும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். ரேபிட் டெஸ்ட் கருவி என்பது ஒரு கூடுதல் உபகரணம் மட்டும்தான். அது இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேர்ந்துவிடும்.
ஆனால், நாங்கள் அதற்காக காத்திருக்கவில்லை. பிசிஆர் சோதனை தற்போது நமது கைவசம் உள்ளது. அதை வைத்து முடிந்த அளவு அதிகம் பேருக்கு பரிசோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார், பீலா ராஜேஷ்.