கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேகமாக பரவும் டெங்கு... தமிழகத்தில் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல்..!
சென்னை: கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கொரோனா தொற்று குறையாத நிலையில் டெங்குவும் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவது சுகாதாரத்துறைக்கு சவாலானதாக உள்ளது. இந்நிலையில் மழைக்காலமும் தொடங்கிவிட்டதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும், நோய் தடுப்புப் பணிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால் நோய் கண்டறிதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், உடல்வலி என இரண்டுக்கும் பொதுவான அறிகுறிகள் இருப்பதால் இரண்டு சோதனைகள் நிகழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கும் அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.