உங்க தலைவரை போல எடப்பாடி கிடையாது! அமைச்சர் சக்கரபாணிக்கு, அதிமுக ஜெயக்குமார் பதிலடி
சென்னை: ‛‛திமுக தலைவர் முக ஸ்டாலின் போன்று எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படவில்லை. திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சி தலைவராக முறைப்படி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தவறியதாக கூறி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

ரேஷன் அரிசி கடத்தல்
கடந்த ஓராண்டு கால விடியா ஆட்சியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிகாட்டும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து வந்தார். பல்வேறு கடத்தல் தொழில்கள் தமிழ்நாட்டை கேந்திரமாக கொண்டு நடைபெற்று வந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கான ரேஷன் அரிசி ஆளுங்கட்சியினர் துணையோடு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை நாங்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டினோம். அப்போதெல்லாம் மழுப்பலாக பதில் அளித்த உணவுத்துறை அமைச்சருக்கும், இந்த அரசுக்கும் கொட்டு வைப்பது போல் ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்துக்கு குறிப்பாக அவரது குப்பம் தொகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், பாலிஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரிசி கடத்தலை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வற்புறுத்தி உள்ளார்.

நடவடிக்கை இல்லை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட உணவுத்துறை அமைச்சர் கடத்தலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறிப்பிடவில்லை. மாறாக அதிமுக ஆட்சியில் பிடிபட்ட கடத்தல் அரிசி பற்றியும், இந்த ஆட்சியில் பிடிபட்ட கடத்தல் அரிசியையும் நடவடிக்கையையும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது கடுமையாக தடுக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. தவறுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக விரோதிகளால் மிரட்டப்படுகின்றனர். அதனால் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் லட்சக்கணக்கான டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

ஆக்கப்பூர்வமாக..
இதனை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொறுப்பற்ற முறையில் ‛எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டாம்' என கூறியுள்ளார். அமைச்சர் சக்கரபாணியின் தலைவரை(மறைமுகமாக ஸ்டாலின்) போல் என்றைக்குமே எடப்பாடி பழனிசாமி எதிரிகட்சி தலைவராக செயல்பட்டது இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

முறைகேடுகள்
உணவுத்துறை அமைச்சரின் துறையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. இது ஊடகங்கள் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிறகும் இன்று வரை நடவடிக்கை இல்லை. ஊருக்குத்தான் உபதேசம் என்ற கொள்கையை விட்டுவிட்டு செயல்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.