பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடைய கல்யாண்சிங், கெம்காவுக்கு பத்ம விபூஷண் விருதா? ரவிக்குமார் கண்டனம்
சென்னை: பாபர் மசூதி இடிப்பு எனும் பயங்கரவாத செயலில் தொடர்புடைய கல்யாண்சிங், கெம்கா ஆகியோருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது சமூக வலைதளத்தில் எழுதியுள்ளதாவது: பத்ம விபூஷன் விருது இந்த ஆண்டு நான்கு பேருக்குத் தரப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டுபேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருமே பாபர் மசூதி இடிப்போடு தொடர்புகொண்டவர்கள்.
கவனிக்க யாருமில்லையா? மருத்துவமனையில் போராடும் வ.உ.சி கொள்ளுப்பேத்தி.. 30 நிமிடத்தில் உதவிய மா.சு!
கல்யாண்சிங், கெம்கா
ஒருவர் கல்யாண்சிங் - பாபர் மசூதி இடிப்பின்போது உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். இன்னொருவர் ராதேஷ்யாம் கெம்கா- கீதா பிரஸ் டிரஸ்டின் தலைவராகவும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். ராதேஷ்யாம் கெம்கா கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது 86 ஆவது வயதில் உடல் நலிவால் இறந்துபோனார். கல்யாண் மாதப் பத்திரிகையும், கீதா பிரஸும் இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவதில் எப்படி பங்காற்றியுள்ளன என்பதை அக்ஷயா முகுல் என்ற பத்திரிகையாளர் 'கீதா பிரஸ் அண்ட் தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்புக்கு தூண்டியவர்
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் அதற்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர் கெம்கா. பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் ஆதாரங்கள் இருப்பதாக கெம்கா கல்யாண் பத்திரிகையில் எழுதினார். அதுவொரு மசூதி என்பதற்கான எந்த அடையாளமும் இப்போது இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக அது கோயிலாகவே இருக்கிறது ' என எழுதிய கெம்கா ' பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் ஏராளமான கோயில்களை இடித்துவிட்டார்கள் ' என இந்துக்களைத் தூண்டினார் .
சேது கால்வாய்- ராமர் பாலம்
கெம்காவின் விஷமப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தோடு நின்றுவிடவில்லை. அது தமிழ்நாடுவரை நீண்டது. சேது சமுத்திரம் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக கல்யாண் பத்திரிகையில் ராதேஷ்யாம் கெம்கா எப்படியெல்லாம் பொய்க் கதைகளைப் பரப்பினார் என்பதை அக்ஷயா முகுல் தனது நூலில் பின்வருமாறு எடுத்துக்காட்டியிருக்கிறார்: " ராமர் சேது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படாவிட்டாலும், 1860 ஆம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் மாலுமி இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் தான் ஒரு பெரிய தடையை அனுபவித்ததாகக் கூறியதாக கல்யாண் பத்திரிகை இந்துக்களின் போராட்டத்தைத் தூண்டியது. " கடல் பயணத்தைக் கடினமாக்கும் அந்தத் தடையை நீக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த 145 ஆண்டுகளில் பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன" எனக் குறிப்பிட்ட கெம்கா தனது வாதங்களுக்கு விஞ்ஞான ரீதியிலான ஆதாரத்தை வழங்கும் வகையில், "நாசாவின் செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட படத்தின்மூலம் இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே 48 கிமீ நீளமும் கிட்டத்தட்ட 2 கிமீ அகலமும் கொண்ட பாலம் நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்துள்ளது" எனக் கூறினார்.
சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு
"பாலத்தின் மேல் நீர் மட்டம் 1 முதல் 10 மீட்டர் வரை இருந்தது. இந்தப் பாலம் 1,750,000 ஆண்டுகள் பழமையானது" என்று நாசா அறிக்கை கூறுவதாகவும், இந்து நம்பிக்கையின்படி அது "நான்கு யுகங்களில் (கிருதா, திரேதா, துவாபர மற்றும் கலி) இரண்டாவதும், 12.96 லட்சம் ஆண்டுகள் நீடித்ததுமான திரேதா யுகத்துடன் தொடர்புடையது" என்றார். " ராமர் சேது அழிக்கப்பட்டால் முன்னெப்போதும் இல்லாத அழிவு ஏற்படும் என கெம்கா கல்யாண் பத்திரிகையில் விவரித்தார்: 'அதை அழிப்பது ஒரு பெரிய குற்றம், நாம் அனைவரும் குற்றவாளிகள் ஆவோம். அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கும் அலட்சியத்துக்கும் எதிராகவும், சனாதன இந்து மத விழுமியங்களைப் பாதுகாக்கவும், பல மதத் தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நாடு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்." என்று கெம்கா அச்சுறுத்தினார். (அக்ஷயா முகுல் , கீதா பிரஸ் அண்ட் தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா, 2015 ) என அந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
உ.பி. தேர்தலுக்காக..
பத்ம விபூஷன் விருதை உத்தரப் பிரதேசத் தேர்தல் நோக்கில்தான் இந்த இருவருக்கும் மறைவுக்குப் பின் மோடி அரசு அறிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு என்னும் பயங்கரவாதச் செயலை ஆதரித்தவர்களுக்கு நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்குத் தலைக்குனிவு! இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. பதிவிட்டுள்ளார்.