அதிமுக மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்... ஓபிஎஸ் - ஈபிஎஸ் கடிதம்
Recommended Video
சென்னை: அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதியான தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதலமைச்சரின் மகனான, ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை விட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கூட, ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார்.
இந்தநிலையில், அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மான்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான, திரு. ஓ. பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி k. பழனிசாமி ஆகியோரால் இன்று (21.6.2019), வெள்ளிக் கிழமை ), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. P. ரவீந்திரநாத் குமார் அவர்களை நியமனம் செய்து, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மான்புமிகு ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.