ஓரே ஒரு குருக்கள் வர்றார்.. அதிமுக மக்களவை குழுத் தலைவர் ரவீந்திரநாத் குமார்!
Recommended Video
சென்னை: மக்களவை அதிமுக குழுத் தலைவராக ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மக்களவைக்குப் போயுள்ள ஒரே எம்பி ரவீந்திரநாத் குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேனி ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.
மற்ற அனைவருமே மண்ணைக் கவ்வினர். இது ஏன் என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளது. தொடர்ந்து கொண்டுள்ளன விவாதங்கள்.
திமுக கெத்து
மறுபக்கம் திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. தேனியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்கள் நல்ல அறுவடை செய்து கெத்தாக லோக்சபாவுக்குள் நுழைந்துள்ளனர்.
அதிமுக குழு
இந்த நிலையில் லோக்சபா அதிமுக குழுத் தலைவராக ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர வேறு யாரையும் தேர்வு செய்ய இயலாது என்றாலும் கூட இந்த தேர்வு பல ஆச்சரியங்களைக் கொடுத்துள்ளது.
முதல் முறை எம்பி
முதல் முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்பி ஒருவர் முதல் முறையே குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதை விட முக்கியம், வரலாறு படைத்த ஒரு மாநிலக் கட்சியின் லோக்சபா குழுத் தலைவராக முதல் முறை எம்பி ஒருவர் தேர்வாகியிருப்பதும் அக்கட்சியினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தம்பிதுரை மாதிரி
தம்பிதுரை போன்ற ஜாம்பவான்களை அதிமுக குழுத் தலைவராக பார்த்த லோக்சபா இப்போது முதல் முறையாக ஒரு புதுமுக எம்பியை அந்தப் பதவியில் பார்க்கவுள்ளது. அதை விட முக்கியமாக அனைத்து முக்கிய விவாதங்களிலும் ரவீந்திரநாத் குமார் பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இது இன்னொரு வகையில் அவருக்கு மிகப் பெரிய சான்ஸும் கூட.
செம சான்ஸ்
தமிழகத்தின் பிரச்சினைகளை தொகுதி பாரபட்சம் பார்க்காமல் அவர் எழுப்ப முடியும். தமிழகத்தின் நலன்களுக்காக அவர் உரத்துக் குரல் கொடுக்க முடியும். ஒருவேளை அதற்கு பலன் கிடைத்தால், அதாவது மத்திய பாஜக அரசு அவர் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பித்தால் அது அதிமுகவுக்கும் சேர்த்து பெயர் வாங்கிக் கொடுக்கும்.
பார்க்கலாம் ஓபிஆர் என்ன செய்யப் போகிறார் என்று.