ஏடிஎம்களில் பணம் வரவில்லையா? கவலை வேண்டாம்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வைத்த அதிரடி செக்!
சென்னை: ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலும் பலர் இப்போது வங்கிக்கு செல்வது இல்லை. எல்லா சேவைகளும் இப்போது 24 மணி நேரமும் ஆன்லைனில் கிடைக்கிறது. கையடக்க மொபைலில் எல்லா வேலைகளும் முடிந்துவிடுகிறது.
பணம் தேவை என்றாலும் அருகில் உள்ள எந்த ஏ.டி.எம் மையத்திற்காவது சென்று எடுக்க முடிகிறது. இந்த சேவைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். ஏ.டி.எம். களில் பணம் எடுப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
பணம் எடுத்தாக மெசேஜ்
சில நேரங்களில் நீங்கள் , ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் வராமல் இருக்கலாம், ஆனால் வங்கி கணக்கில் தொகை பிடித்தம் செய்திருப்பதாக குறுஞ்செய்தி வருவது வழக்கமாகும்,. ஆனால் அப்படி. வராத தொகையை, அடுத்த ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு வங்கிகள் வரவு வைக்க வேண்டும்.
இழப்பீடு தர வேண்டும்
ஆனால், அவ்வாறு நடைபெறுவதில்லை. கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், ‘ஏ.டி.எம். பரிவர்த்தனை வெற்றியடையாமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு வைக்கவில்லையெனில், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி அதிரடி
இதன்படி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் வராமல் போன நாளில் இருந்து குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அந்த பணத்தை வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், நூறு ரூபாய் இழப்பீடாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணம் அனுப்பலாம்
முன்னதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு டிசம்பர் முதல் ஆர்.டி.ஜி.எஸ் (ரியல் டைம் மொத்த தீர்வு) அமைப்பு முறையில் 24 மணி நேரமும் (24x7) பணம் அனுப்ப முடியும் என்று அறிவித்தது. இதன்படி நிறுவனங்கள், வணிகத்திற்காக இனி 24 மணி நேரமும் பல லட்சம் ரூபாயை கூட நிமிடத்தில் அனுப்ப முடியும்.