இஎம்ஐ நாளை முதல் கட்டாயம்.. கடன் தவணை சலுகை மேலும் நீட்டிக்கப்படுமா? ஆர்பிஐ சொல்வது என்ன?
சென்னை: ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் தவணை சலுகை இன்றுடன் முடிகிறது. இதன் காரணமாக அடுத்த வாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் எல்லோரும் இஎம்ஐ கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் வேலைக்கு செல்லாத மக்கள் எப்படி இஎம்ஐ கட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இந்நிலையில் கடன் தவணை சலுகை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்ட பல்வேறு பணிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்.. பேருந்தில் செல்ல என்னென்ன கட்டுப்பாடுகள்.. விவரம்
ரிசர்வ் வங்கி அதிரடி
எனினும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கால் மக்கள் வருவாய் இழப்பை சந்தித்த காரணத்தால் , பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கு அறிவித்த முதல் 3மாதங்கள் இஎம்ஐ வசூலிக்கவில்லை.
இன்றுடன் முடிகிறது
இந்த சலுகை மே 31 வரை முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி. தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் ஆகியவற்றுக்கு மக்கள் இஎம்ஐ கட்டாமல் மொரோட்டோரியம் என்று சொல்லப்படும் கடன் தவணை சலுகையை பயன்படுத்தினர்.
இஎம்ஐ செலுத்துவது கட்டாயம்
இந்நிலையில் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே சலுகை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சலுகை இன்றுடன் முடிகிறது. இதனால் நாளை முதல் வழக்கம் போல் வங்கிகள் இஎம்ஐ வசூலிக்க முடிவு செய்துள்ளன. பெரும்பாலான வங்கிகள் மாதத்தின் முதல் வாரத்தில் இஎம்ஐ பணத்தை ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கும். ஆனால் பணம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தவணை நீட்டிக்கப்படுமா?
இந்நிலையில் கடன் தவணை சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் , பொதுமக்கள் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் தொழிற்துறைகள், நிறுவனங்கள் இன்னும் முழு அளவில் இயங்கவில்லை. பலரின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது. எனவே இந்த தவணை சலுகை மீண்டும் நீட்டிக்கப்படுமா என தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Recommended Video
வங்கிகள் வைத்த கோரிக்கை
இந்த விவகாரத்தில் கடன் தவணை சலுகையை நீட்டிக்கக்கூடாது என வங்கிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தன. ஏற்கனவே 6 மாத சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெச்டிஎப்சி, கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் கடன் தவணையை நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்திவைக்கும் அவகாசத்தை ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நிறுத்தி வைத்தால் கடனை திருப்பி செலுத்தும் ஆர்வத்தை குறைத்துவிடும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதாம்.