இந்தி திணிப்பு: கஸ்தூரி ரங்கன் அறிக்கையை முச்சந்திதோறும் தீயிட்டு கொளுத்துவோம்- வைகோ
Recommended Video
சென்னை: இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக கூட்டணியின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
திராவிடக் கட்சிகளோடு மோதி பா.ஜ.கவின் மூக்கு உடைபட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் அகில இந்தியாவின் மொத்தக் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு திராவிடர் இயக்கத்தின் பெருமையை உயர்த்தியிருக்கிறார்.
தெருவுக்கு தெரு தீ வைப்போம்
கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியை தீயிட்டுக் கொளுத்தத் தயாராக இருக்கிறோம். அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியிலேயே தீயிட்டு கொளுத்துவோம்.
திருத்தம் பொய்
கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மும்மொழித் திட்டம் அந்த வரைவு அறிக்கையில் இன்னமும் இருக்கிறதே. மத்திய அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான ஏமாற்றுவேலை. தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டோம்.
தியாகம் வீண்போகாது
மொழிப்போர் தியாகிகள் எதற்காக செத்து மடிந்தார்களோ.. எதற்காக இந்திய ராணுவத்தின் முன் மார்பை காட்டி மடிந்தார்களோ அந்த தியாகமானது வீண்போகாது. அந்த தியாகத்தை நாங்கள் வீண் போகவும் விடமாட்டோம். இவ்வாறு வைகோ பேசினார்.
சுயாட்சி முழக்கம்
இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கருணாநிதியின் முழக்கத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். இந்தி திணிப்பு என்பது மொழி திணிப்பு மட்டுமல்ல; கலச்சாரத் திணிப்பு. அதன்மூலம் நம்மை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.
குடியேற்ற ஊடுருவல்
பிற மொழி பேசுபவர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. மொழி, கலாச்சாரத்தின் வழியே ஊடுருவ முடியாதவர்கள் குடியேற்றத்தின் மூலம் ஊடுருவுகின்றனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமர் மோடியை எதிர்க்க திமுக வாள் எனில் நாங்கள் கேடயமாக இருப்போம் என்றார்.