வடகிழக்குப் பருவமழை கூடுதலாக பெய்யும்.. எதிர்கொள்ள தயார்..கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தகவல் படி 35-75% கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். தென்மேற்கு பருவமழையை விட சிறப்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வோம். தமிழ்நாடு முழுவதும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். பருவமழை அபரிமிதமாக பெய்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து வரும் நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்.. தமிழகத்தை புயல் தாக்குமா? வானிலை மையம் சொன்ன தகவல்!
வடகிழக்கு பருவமழை
இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா, வடகிழக்கு பருவ மழை வருகிற 20ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும். 88 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை சராசரி மழை பெய்யக் கூடும். சராசரியாக இந்த வடகிழக்கு பருவத்தில் 3 சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் நிலவும் லாநினா மற்றும் எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிலைமைகள் காரணமாக அதிக மற்றும் தீவிரமான புயல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
எப்போது புயல் உருவாகும்
வானிலை மாதிரிகளின் அடிப்படையில் வட ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, மற்றும் வங்கதேசம் அருகே புயல்கள் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. புயல்கள் தமிழகத்தை தாக்குவதை விட இந்த பகுதிகளை அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் வங்க கடலில் புதிய புயல்கள் சுழற்சி உருவாகும் என்று கூறியுள்ளார்.
மிரட்டும் மழை
வட கிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையே சென்னையை வெள்ளக்காடாக மாற்றி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் தமிழக அரசு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வரும் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 26 ஆம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
2048 வீரர்கள் தயார்
இந்த ஆண்டு வடகிழக்கு 35 முதல் 75 சதவீதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் சார்பில் 2048 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் 799 பேர் தமிழ்நாடு சார்பிலும் 1249 பேர் மத்திய அரசு சார்பிலும் தயராக உள்ளனர். அரசு எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளது. 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் என்று தகவல் உள்ளது. புயல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. புயல் வந்தாலும் எதிர்நோக்குவதற்கு அரசு தயாராக உள்ளது.
பாதுகாப்பு மையங்கள்
சென்னை மாநில கட்டுப்பாட்டு மையம் எண் 1070. மாவட்ட அளவில் எண் 1077 கொடுக்கப்பட்டுள்ளது. 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இட பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்ப பாதுகாப்பான பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்க, பேரிடர் மேலாண்மைக்கு என எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் உள்ளது.
வானிலை முன்னறிவிப்புகள்
தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்கள் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசிற்கு என பிரத்யேகமாக வானிலை முன்னறிவிப்புங்களை வழங்க கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் 100 தானியியங்கி வானிலை மையம், 1400 தானியியங்கி மழை மானி பொறுத்துவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.