இந்து என்பது மாற்றான் சொல்லா?... கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார்.. அர்ஜூன் சம்பத் சவால்
சென்னை: இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குமுன் ஆள வந்தாராலோ, இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம் என இந்து என்ற சொல்லுக்கு கமல்ஹாசன் விளக்கமளித்தார்.
யோகா செய்யுங்க பதற்றம் குறைஞ்சிடும்.. கமலை கிண்டலடித்த எஸ்வி சேகர்!
மாற்றான் கொடுத்த பட்டயம்
மேலும், நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை. என்றும் நாம் "இந்தியர்" என்கிற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது எனவும் தெரிவித்திருந்தார்.
யார் மகாத்மா?
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம் என்று கூறினார். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல்ஹாசன் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சீக்கிய தீவிரவாதம்?
மேலும், இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
வரலாற்று பிழை
இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துவிட்டதாக கூறிய அவர், காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது என்றும், காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை எனவும் பதிலளித்தார்.
விவாதம் நடத்த தயார்
இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன். கமல்ஹாசன் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்றார். அதே நேரம், விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல்ஹாசன் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.