ராமதாஸ், அன்புமணிக்காக அரசியலைவிட்டு விலக தயார்.. திருமாவளவன் தடாலடி
Recommended Video
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்காக தாம் அரசியலை விட்டு விலகவும் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பானை சின்னம் வரைந்த காரணத்தால் பொன்பரப்பி கிராமத்தில் தலித்துகள் தாக்கப்பட்டு அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. பாமகவின் தூண்டுதலால்தான் இத்தகைய வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
மேலும் பாமகவில் இருந்து வெளியேறிய பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தற்போது திமுக அணியை ஆதரிக்கிறது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக வேல்முருகன் பிரசாரம் செய்தார். இதனால் பாமகவினர் இருதரப்பு மீதும் கடும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார்; எனக்கு தேவை உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அவர்களுக்காக என் அரசியல் வாழ்க்கையை விட தயார் என திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவனின் இந்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்பரப்பி வன்முறை தொடர்பாக நேற்று பேசியிருந்த பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு கூறுகையில், திமுகதான் விடுதலைச் சிறுத்தைகளையும், பாமகவையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் லோக்சபா தேர்தலின்போது விடுதலைச் சிறுத்தைகளை திமுகவினர் எப்படி மதித்தார்கள் என்பதை ஒரு நாள் திருமாவளவனே வந்து செய்தியாளர்களிடம் குறையாக சொல்வார் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.