கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.. வாழ்ந்து கெட்ட தேமுதிக.. ஒரு பிளாஷ்பேக்!
Recommended Video
சென்னை: அதிமுகவிடம் இத்தனை பிடிவாதமாக நிற்கும் தேமுதிகவின் தற்போதைய கள நிலவரத்தைப் பார்த்தால் நிச்சயம் அத்தனை பேருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். காரணம் கிட்டத்தட்ட கிரவுண்ட் ஜீரோ நிலையில்தான் தேமுதிக உள்ளது.
2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார் விஜயகாந்த். அப்போது அவர் மீது தமிழகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
திமுக, அதிமுகவுக்கு மிகப் பெரிய மாற்று வந்து விட்டது என்று கூட மக்கள் பேச ஆரம்பித்தனர்.. விஜயகாந்த்தை நோக்கி மக்கள் திரும்பவும் ஆரம்பித்தனர். ஒரு எழுச்சியை ஏற்படுத்தினார் விஜயகாந்த் என்பதில் சந்தேகம் இல்லை.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாசகர் விரும்பும் செய்தியை வழங்குகிறோம்: டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி
தனியாக முதல் தேர்தல்
கட்சி ஆரம்பித்த பின்னர் 2006ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். தனித்துப் போட்டியிட்டார். சூறாவளியென பட்டி தொட்டியெங்கும் படையெடுத்தார். இவரைப் போல யாரும் சுற்றுப்பயணம் செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு அவரது பிரச்சாரம் தமிழகம் முழுவதும் இருந்தது. ஒரு இடத்தில் வென்றது தேமுதிக. அதுவும் விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
அதிரடி வாக்குகள்
முதல் தேர்தலிலேயே தமிழகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் விஜயகாந்த். யாருக்குமே தெரியாத வேட்பாளர்களை தமிழகம் முழுக்க நிறுத்தி முரசு என்ற சின்னத்தில் மக்கள் முன்பு நின்று களம் கண்ட அவர் 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று அதிர வைத்தார். காலம் காலமாக அரசியல் நடத்தி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தை அக்காலகட்டத்தில் கொண்டிருக்கவில்லை.
2009ல் புதிய எழுச்சி
அடுத்து 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார் விஜயகாந்த். இம்முறையும் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். ஆனால் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. ஆனால் வாக்குகளை அள்ளினார். இந்த முறை அவரது கட்சி பெற்ற வாக்குகள் 10.09 சதவீதம் ஆகும். இது திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவை அதிர வைத்தது. சுதாரிக்க வைத்தது.
சிக்கினார் சூழ்ச்சியில்
அதுவரை தெளிவாகத்தான் இருந்தது விஜயகாந்த்தின் பயணம். ஆனால் 2011ல் அவர் அரசியல் சூழ்ச்சியில் சிக்கினார். அவரது சரிவும் அந்த ஆண்டுதான் தொடங்கியது. முதல் முறையாக கூட்டணி என்ற பழைய பாணிக்கு அவர் போய் விழுந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தா். 29 இடங்களில் வெற்றி கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். ஆனால் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 சதவீதமாக இறங்கி விட்டது.
கெட்டுப் போன பெயர்
அதன் பிறகு தேமுதிக மீதான மக்களின் பார்வை மாறிப் போனது. மக்களின் நம்பிக்கையை விஜயகாந்த் இழந்தார். இதனால் அடுத்து வந்த 2014 லோக்சபா தேர்தலில் அவரது கட்சியின் வாக்குகள் மேலும் சரிந்தன. 5.1 சதவீத வாக்குகளே கிடைத்தன. போட்டியிட்ட 14 இடங்களிலும் அவரது கட்சி பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. டெபாசிட்டையும் பறி கொடுத்தது.
மறுபடியும் சறுக்கல்
இந்த நிலையில் 2016 சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்தது. கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தது. ஆனால் விஜயகாந்த் சுதாரிக்கவில்லை. மாறாக மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒரு உப்புமா கூட்டணியை அமைத்து போட்டியிட்டார். மிகப் பெரிய தோல்வி, வரலாறு காணாத அடி அந்தக் கூட்டணிக்குக் கிடைத்தது. அதை விட மோசமாக தேமுதிகவின் வாக்கு சதவீதம் வெறும் 2.4 சதவீதமாக இறங்கிப் போனது.
நிலைமை இதுதான்
அதன் பின்னர் மக்களுக்காக எதையும் தேமுதிக செய்ததாக நினைவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக களம் கண்டதாக நினைவில்லை. நீட் விவகாரத்திலும் கூட மக்களுக்கு எதிர் திசையில்தான் நின்றது தேமுதிக. மக்களிடமிருந்து வெகுவாகவே அந்நியப்பட்டுப் போயுள்ளது. எனவே மக்கள் தேமுதிகவை கிட்டத்தட்ட மறந்து போய் விட்டனர். இடையில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகியவை மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில்தான் தற்போது தேமுதிக உள்ளது.
இவர்களுடன்தான் போட்டி
உண்மையில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுடன் போட்டியிடும் நிலையில்தான் தேமுதிக உள்ளது. பாமகவெல்லாம் மிகப் பெரிய இடத்தில் உள்ளது. தொடர்ந்து கடுமையாக உழைத்து வரும் கட்டமைப்புடன் கூடிய கட்சியாக அது உள்ளது. ஆனால் தேமுதிக அப்படி இல்லை. விஜயகாந்த் இல்லாவிட்டால் தேமுதிகவை திரும்பிக் கூட யாரும் பார்க்க மாட்டார்கள். இதுதான் கள நிலவரம்.