'டேக் இட் ஆர் லீவ் இட்' திட்டத்தில் திமுக? - 'என்னப்பா இது' மோடில் கூட்டணி கட்சிகள்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்க, வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னணி கட்சிகளான திமுக - அதிமுக தொடங்கிவிட்டன. ஆனாலும் இப்போது வரை ஒரு க்ளீயர் பிக்சர் கிடைக்கவில்லை.
உங்களுக்கு எப்படி தெரியும்?
'இழுபறி' எனும் வார்த்தையை கேட்டாலே சில கட்சித் தலைவர்கள் டென்ஷன் ஆகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் 'என்ன சார்... தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாமே?' என்று கேட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'எங்களுக்கே தெரியாதது உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று நக்கல் கலந்த தொனியில் கோபத்தை வெளிப்படுத்துகிறார். "திமுக தலைமையுடன் நல்ல முறையில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு இழுபறியும் இல்லை" என்றவர், அதைச் சொல்லி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை ஒரு தொகுதி கூட உறுதி செய்யப்படவில்லை.
தனித்து போட்டியிட ஆலோசனை
அதே சமயம், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகள் வரை எதிர்பார்த்த மனிதநேய மக்கள் கட்சி இதனை அரைமனதோடு இதை ஏற்றது. எனினும், இரண்டு தொகுதியும் வேண்டாம் என்று சொல்லி விட்டு தனித்து போட்டியிடலாமா என்றும் அக்கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒன்லி 5 சீட்
இதனிடையே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
அதுவும் நியாயம் தான்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, "வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு, நியாயம்" என்றார் பொத்தாம் பொதுவாக. (அப்புறம் ஏன் சார் கண்ணு வேர்க்குது?)
ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்
இங்கே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு உள்ள இரண்டு பெரிய சிக்கல்... ஒன்று, கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை கிடைக்காமல் இருப்பது, இரண்டாவது, திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது. இதற்கு முக்கிய காரணம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று திமுக நம்புவது தான். ஜெயலலிதா இல்லாத அதிமுக, பாஜக எதிர்ப்பு மனநிலை, வலிமையான எதிர் தரப்பு இல்லாமை போன்ற காரணிகளால், இதுவரை இல்லாத அளவுக்கு கூட பெரும் வெற்றியை திமுக பெறலாம் என்று ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, 170-180 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள திமுக, கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களையே ஒதுக்க முன்வந்துள்ளது. அத்துடன், மதிமுக, விசிக மற்றும் இதர சிறிய கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக நிர்பந்திக்கிறது. இந்த காரணங்களால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே சிக்கல்
விசிகவை பொறுத்தவரை தனிச் சின்னம், இரட்டை இலக்க தொகுதிகள் என்பது பிரதானமாக திமுக தலைமையிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. மதிமுக இரட்டை இலக்கு கேட்கவில்லை என்றாலும், தனிச் சின்னம் என்பதில் உறுதியாக உள்ளது. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுகவுடன் இதே சிக்கல் தான். எனினும், சுமூக நிலையை எட்ட, திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முடிவு செய்து பேச்சு
ஒட்டுமொத்தமாக, கூட்டணி பேச்சுவார்த்தைகளை திமுக அசாத்திய தன்னம்பிக்கையுடன் முன்னெடுப்பது போல தெரிகிறது என்றும், Take it or leave it எனும் பாலிசியில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என முடிவெடுத்து விட்டு கூட்டணி கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பார்கள் போல தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.