கூட்டி வந்து திருப்பி அனுப்பப்பட்ட முல்லைவேந்தன்.. கருணாநிதி ஸ்டைலை கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்
முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நீக்கப்பட என்ன காரணம்?
சென்னை: நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, தொண்டர்களாக இருந்தாலும் சரி.. கருத்து வேறுபாடு காரணமாக யார் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும், "எதுக்கு எதிரி.. தூக்கி உள்ளே இழுத்து போடு" என்பதுதான் கருணாநிதி ஸ்டைல்! ஆனால் இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார் என்றே தெரிகிறது.
இதைதான் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, செய்தார். பிரிந்து போன கட்சியின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கட்சியில் மீண்டும் இணைத்து கொண்டார். இது திமுக தொண்டர்களை நெகிழ்ச்சிப்படுத்தியது.
அப்போது "ஒன் இந்தியா தமிழுக்கு" சிறப்பு பேட்டி அளித்த முல்லைவேந்தன், "கலைஞர் நாற்காலியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் எனக்கு ஒரு நிமிஷம் அப்படியே மெய்சிலிர்த்து விட்டது... அப்படியே கலைஞரை பார்ப்பது போலவே இருந்தது. உணர்ச்சிப்பெருக்கால் என் கண்ணே கலங்கிபோச்சு" என்றார்.
வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா? தேர்தல் கமிஷன் எடுத்த அதிரடி முடிவு
அழகிரி
ஆனால் அதற்கு பிறகு இவர்களை கட்சி கண்டுகொள்ளவே இல்லை. பிறகுதான் தெரிந்தது முல்லை வேந்தனோடு அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததாலும், அழகிரியோடு முல்லை சேர்ந்துவிடுவார் என்பதாலும்தான் அவர் இழுக்கப்பட்டார் என்பது.
செந்தில் பாலாஜி
மீண்டும் இணைந்த முல்லைவேந்தனுக்கு பொறுப்பும் தரப்படவில்லை. "கட்சி தாவி வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் தரும்போது, அடிப்படையிலேயே திமுக காரனான எனக்கு உறுப்பினர் கார்டு மட்டும் தரப்படுகிறது. பணம் இருப்பவர்களை ஒன்று, பணம் இல்லாதவர்களை ஒன்றாக ஸ்டாலின் நடத்துகிறார் என்று முல்லைவேந்தன் புலம்பியதாகவும் சொல்லப்பட்டது.
பாப்பிரெட்டி
எனினும் தொகுதி வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டி வேட்பாளர் மணி போன்றோரும் முல்லைவேந்தனை சந்தித்து ஆசியும் பெற்று வந்தனர். ஆனால் உண்மையில் முல்லைவேந்தன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பினார். விருப்பமனு அளிக்க சென்றபோது நிறைய கசப்பான அனுபவங்கள் அவருக்கு கிடைத்தனவாம். அதனால் போட்டியிட முடியவில்லை.
உதயநிதி ஸ்டாலின்
வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஸ்டாலினுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் என்பது நிலைமை. ஆகவே தருமபுரி வந்த உதயநிதி ஸ்டாலின் காதுக்கு இந்த விஷயம் எட்டியது. தொலைபேசி மூலம் பேசி சமாதானப்படுத்தினார். ஆனாலும் முல்லைவேந்தன் திருப்தி அடையவில்லை.
மரியாதை இல்லை
இப்போது திமுகவிலிருந்தே முல்லைவேந்தன் நீக்கப்பட்டு விட்டார். முல்லைவேந்தன் ஏற்கனவே திமுகவிலிருந்து தேமுதிக சென்றவர். அங்கே உரிய மரியாதை இல்லாததால் திரும்பவும் விலகி இருந்தவரை திமுகவுக்குள் கொண்டு வந்தார்கள். இங்கேயும் மரியாதை கிடைக்காத காரணத்தினாலே அவர் சமீபத்தில் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும், தனக்கு ஆதரவளிக்கும்படி முல்லைவேந்தனிடம் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய்பட்டுள்ளார்.
பாமகவில் இணைவாரா?
முல்லைவேந்தன் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். தர்மபுரி தொகுதியில் இந்த சாதிய ஓட்டுக்கள் 2 லட்சம் உள்ளன. முல்லைவேந்தனின் பல ஆதரவாளர்கள் இந்த சமூகத்தில்தான் உள்ளனர். அதனால்தான் இன்னமும் தொகுதியில் முல்லைவேந்தனுக்கு மவுசு குறையவில்லை. ஒருவேளை பாமகவில் அதிகாரப்பூர்வமாக முல்லைவேந்தன் இணைந்தால் அது முல்லைவேந்தனுக்கு பலம்தருகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஸ்டாலினுக்கு மைனஸ்தான்! திமுகவுக்கு சரிவுதான்!