“2 மாசத்துக்கு முன்னாடியே..” - மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றக் காரணம் இதுதான்..!
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்புடன் பேசியிருக்கிறார்.
Recommended Video
திமுக தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும், தொண்டர்கள் உழைக்காமல் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது, தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் செய்திதான் இனி எனக்கு வர வேண்டும் என மா.செக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே அடிமட்டத் தொண்டர்களை லோக்கல் நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை என தலைமைக்கு புகார்கள் பறந்து வந்தன.
தமிழகம் முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை' கூட்டங்கள் ! திமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவு!
தொண்டர்கள் புகார்
10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், விடிவு காலம் பிறக்கும் எனக் காத்திருந்த தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சி நிர்வாகிகளால் ஏமாற்றமே மிஞ்சியது. கழகத்தின் கடைக்கோடித் தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என உடன்பிறப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் புகார்
உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க பிரமுகர்களும், லோக்கல் உடன்பிறப்புகளின் குறைகளைத் தீர்த்து வைக்காததால், பலரும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே குமுறி வந்தனர். கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் வறுமையால் வாடும்போதும், குடும்பத்திற்காக சிறு சிறு உதவிகள் கேட்டாலும் நிர்வாகிகள் உதவி செய்வதில்லை என வேதனையோடு பொறுமி வந்தனர்.
நடவடிக்கை இல்லை
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.கவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையிலும் இன்னும் ரத்து செய்யவில்லை என தி.மு.க தொண்டர்கள் சிலர் சில மாதங்களுக்கு முன் மனம் வெதும்பியிருந்தனர். இதுதொடர்பாக திமுக தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போதே, ஸ்டாலின், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் நடவடிக்கை எடுங்கள், தலைமைக்கு புகார் வரக்கூடாது என உத்தரவிட்டிருந்தாராம்.
விளாசல்
இந்நிலையில்தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொறுப்பாளர்களை ரவுண்டு கட்டி விளாசியுள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். தொண்டர்கள் உழைத்ததால் தான் நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். பதவி கிடைத்துவிட்டது என தொண்டர்களை மதிக்காமல் இருக்கக்கூடாது. கடைக்கோடித் தொண்டன் தலைமைக்கு புகார் கொண்டு வரும் நிலை இருக்கிறது என்றால் அங்கு பணிபுரியும் நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என சாட்டையைச் சுழற்றியுள்ளார்.
தொண்டர்களால்தான் பதவிக்கு வந்துள்ளோம்
முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்? எனக் கேட்டுள்ளார் ஸ்டாலின்.
தொண்டன் மனம் நோகக்கூடாது
கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா? தொண்டன் உழைக்காமல் நிர்வாகி வேலை பார்க்காமல், யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால், அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என கண்டிப்போடு சொல்லியிருக்கிறார்.
இந்த செய்திதான் வர வேண்டும்
கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்திதான் வர வேண்டும். அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும் என கடுமையாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.