நீட்டை அனுமதிக்க முடியாது.. சுகாதார அதிகாரிகளின் திடீர் மனமாற்றம்.. காரணம் என்ன? பரபர தகவல்கள்
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியதற்குப் பின்னணியில் என்ன காரணம் என பலரும் பல வகையான கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்,
மருத்துவ படிப்புகளில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யத் தேசிய அளவிலான நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அப்போது முதலே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
தமிழகத்தில் நீட்
கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்திற்கு முதலில் ஓராண்டிற்கு மட்டும் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமானதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்தத் தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
மாணவி அனிதா
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் பலரும் போராடி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் அனிதா. அவர் +12 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடர் சட்ட போராட்டங்களை நடத்தி வந்த அவர், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி இறந்தார். நீட் காரணமாகத் தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் நீட்
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே பெரும்பாலும் உள்ளது. இதன் காரணமாகவே சட்டசபை தேர்தலிலும் நீட் முக்கிய பேசு பொருளானது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை நீக்குவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதேபோல அதிமுகவும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் எனக் கூறியிருந்தது.
பிரசாரத்தில் நீட்
பிரசாரத்தின் போதும் இது தொடர்பாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டினர். திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். இருப்பினும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் நீட் நடைபெறவில்லை என்றும் தற்போதுள்ள நீட் தேர்வை 2016ஆம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றும் திமுக பதிலடி கொடுத்தது. மேலும், நீட் மசோதா நிறைவேற்றப்பட்ட போது அதிமுக எம்பிகள் ஒருவர்கூட நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்றும் திமுக குற்றஞ்சாட்டியது.
ஆலோசனைக் கூட்டம்
இந்தச் சூழ்நிலையில், நீட் தொடர்பாக ஆலோசிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அனைத்து மாநில மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு திட்டவட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் ஏற்கனவே மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும் தமிழகம் அரசு சார்பில் கூறப்பட்டது.
திடீர் மாற்றம்
மேலும், இந்த விஷயங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கி ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது மட்டுமின்றி கடந்த சில காலமாக முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு அதிகாரிகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் தெரிவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காரணம் என்ன
இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் எனப் பலரும் பல வகையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே அதிகாரிகளின் நடவடிக்கைகளை மாற்றம் தெரிவதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக பிரமுகர்கள் பலரும்கூட இதுபோன்ற கருத்துகளை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.