டைம் வேஸ்ட்..மணி வேஸ்ட்! மொத்தமாய் இறங்கும் பவர்! ஈரோடு இடை தேர்தலை புறக்கணித்த பாமக! இதுதான் காரணம்
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், பாமக போட்டியிலிருந்து விலகி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பாமக நிர்வாகிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.
திமுக ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளங்கோவனின் மகன் சஞ்சய் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என யூகங்கள் கிளம்பி இருக்கிறது.
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
ஈரோடு இடைத் தேர்தல்
அதிமுக கூட்டணியை பொருத்தவரை அதிமுகவே இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதியாக இருக்கிறது ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட போவதாக கூறி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் என்ன முடிவு எடுக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிமுகவுக்கு ஆதரவளிக்குமா அல்லது திமுகவுக்கு ஆதரவளிக்குமா என இரு கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருந்த நிலையில் நேற்று தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சித் தலைவரான அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
பாமக போட்டியில்லை
இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ, அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கி விடலாம் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடுவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
எதிர்பார்த்தது தான்
இதனால் பாமக ஆதரவை பெறலாம் என இருந்த கட்சிகள் சற்று அதிருப்தியில் இருக்கும் நிலையில் இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். காரணம் பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு பிறகு பாமக எந்த இடைத்தேர்தல்களிலும் போட்டியிடுவதில்லை. பெரும்பாலும் ஆளும் கட்சியே இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஒரு வேட்பாளரை அறிவித்து ஏராளமான பொருட்செலவு செய்து ஓரளவு வாக்கு பெற்றாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதே நிதர்சனம். இதன் காரணமாகவே பாமக இந்த தேர்தலை புறக்கணித்ததாக கூறுகின்றார் நம்முடன் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அதிகார பலம்
மேலும் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக இந்த தேர்தலை கருதுகிறது. இதனால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்களையும் கட்சியினரையும் முழு வீச்சில் களமிறக்கி கூட்டணி கட்சியான காங்கிரசை வெற்றி பெற வைக்க முயலும். மேலும் அதிமுகவின் முகமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எப்படியாவது குறிப்பிடத் தகுந்த வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் என தீவிரம் காட்டுவார்கள். இது போன்ற அதிகார மோதலால் பாட்டாளி மக்கள் கட்சியினரின் உழைப்பை வீணடிக்க அன்புமணி ராமதாசும் விரும்பவில்லை இதன் காரணமாகவே ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றனர்.
ஏன் ஆதரவில்லை?
தேர்தலில் போட்டியில்லை என்றாலும் ஏன் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்பது குறித்து பேசிய நிர்வாகி ஒருவர்,"அன்புமணி ராமதாஸின் திட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலாகவே இருக்கிறது. பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் பாமகவின் திட்டம். அதற்கு முன்னேற்பாடாக நாடாளுமன்ற தேர்தலை பயன்படுத்திக் கொள்ள அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார். தற்போது ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளித்தால் அது வேறு சில கட்சிகளை விவாதத்துக்கு உள்ளாக்கும். இதனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியும் பாதிக்கப்படும் என்பதால் தான் இந்த தேர்தலில் ஒதுங்கியே இருப்போம்" என அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்றனர்.