தொழில் போட்டியே காரணம்.. சீன நிறுவனத்தின் சதியால் ஸ்டெர்லைட் மூடல்.! ஐகோர்ட்டில் பரபர வாதம்
சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை, சீன நிறுவனம் ஒன்று பின்னால் இருந்து தூண்டிவிட்டதாக வேதாந்தா நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் இறுதி விசாரணைக்கு வந்தது
அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆஜரான மூத்த வழக்கறிஞரான அரியமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனம் ஒன்றின் சதி உள்ளதாக குற்றம்சாட்டி வாதிட்டார்.
ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனம் ஒன்றின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தை உள்ளடக்கிய போராட்டமானது, அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சிலர் மற்றும் சில என்.ஜி.ஓ-களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் எப்படி 20,000பேர் கூடினார்கள் என தெரியவில்லை. இது மிக பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதும் சீன நிறுவனமே. தொழில் போட்டி காரணமாக வேண்டுமென்றே ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தை சிலர் தூண்டி விட்டுள்ளனர்.
சர்வதேசஅளவில் அதிக தாமிரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக நாங்கள் தான் இருக்கிறோம் ஆதலால் எங்களுக்கு போட்டியாக உள்ள சீன நிறுவனம் தான் போராட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என பரபரப்பான வாதத்தை முன்வைத்தார் வேதாந்தா தரப்பு வழக்கறிஞர்.
மக்கள் போராட்டத்தினாலும், 13 பேர் மீதான துப்பாக்கிச்சூடு காரணமாகவே ஆலை மூடப்பட்டது. எங்கள் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிட்ட போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த காரணம் முன் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம் என நீதிமன்றத்தில் கூறுகிறது.
துப்பாக்கிச்சூடு தொடர்பான சிபிஐ விசாரணையில் நாங்கள் கிடையாது. ஆனால், எங்கள் நிறுவனத்தை தண்டித்துள்ளனர் என வாதிட்டது வேதாந்தா தரப்பு. ஆலை மூடப்பட்டிருந்தாலும் பராமரிப்பு பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், அமிலம் வெளியேறி ஆலையிலுள்ள கட்டிடங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறைப்படி அனுமதி பெற்று தான் தங்களது ஆலை இயக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், அதை தொடர்ந்த விசாரணைகளில் தங்களது ஆலையை சேர்க்கவில்லை எனவும் வாதிட்ட வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை தேவையின்றி சதி திட்டம் காரணமாக தற்போது தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் தரப்பு வாதம் முழுமையாக நிறைவு பெறாததால், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.