என்னவோ நடக்கிறது திமுக முகாமில்.. துரைமுருகன் பேட்டி உணர்த்துவது என்ன.. அதிமுக ஆட்சிக்கு ஆபத்தா?
அதிமுக அரசை கலைக்க திமுக பல அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தீவிர ஆலோசனை.. துரைமுருகனின் கெத்து பேட்டி.. என்று ஏதோ ஒரு முடிவில் இருக்கிறது திமுக.. எப்படியாவது ஆட்சியை பிடிக்கவே இருக்கும் அத்தனை வியூகங்களையும் கையில் எடுத்துள்ளது!
உண்மையில் கருணாநிதி இருந்தவரை இதுபோன்ற ஆட்சி பிடிப்பு விவகாரத்தில் அது ஒரு போதும் இறங்கியதில்லை. காரணம், எதுவாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி நடந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் கருணாநிதி. அவர் இருந்தவரை அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூட அவர் கூறியதே இல்லை.
ஆனால் தற்போது காலம் மாறிவிட்டதாக தெரிகிறது. கையில் ஆட்சி இருந்தும் அதிமுகவுக்கு உள்ளூர பயமோ என்னவோ, திடீரென 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தை கையில் எடுத்தது. இதன்பிறகுதான் சும்மா இருந்த திமுகவுக்கு பொறிதட்டி விழித்து கொண்டுவிட்டது. காரணம், அடுத்த குறி திமுகவின் 21 எம்எல்ஏக்கள் என்று சொல்கிறார்கள்.
சென்னையில் வெயிலை காணோம்.. 'தண்ணீர் தண்ணீர்' சரிதா போல மழைக்காக காத்திருக்கும் மக்கள்!
துரைமுருகன்
மேலும் நடந்து முடிந்த தேர்தலில் அதிக அளவு பாதிக்கப்பட்டது துரைமுருகன்தான்! வாரிஇறைத்த பணம் ஒரு பக்கம் இழந்தாலும், இது அவரது கவுரவ, மானப்பிரச்சனையாக உருவெடுத்தது. ஆனால் அதை அவருக்கே உரித்தான பாணியில் பெரிசாக அலட்டி கொள்ளவும் இல்லை.. வெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை.. அதே தில்லுடன்தான் பேட்டி தந்தார்!
புது தெம்பு
அதேசமயம் இப்போதெல்லாம் துரைமுருகன் பேச்சில் ஒரு தெம்பு தெரிகிறது. இன்னும் 25 நாளில் ஆட்சியை பிடிப்போம் என்று சவால்விடும் அளவுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து பேசியும் வருகிறார். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என தெரியவில்லை. ஏனென்றால், துரைமுருகன் சும்மா பேச மாட்டார், ஒரு பேச்சுக்கு சவால் விட மாட்டார். அதனால்தான் விஷயம் சீரியஸாக தென்பட ஆரம்பித்துள்ளது.
ஆர்கே நகர்
ஜெயலலிதா இறந்த போதே திமுக ஆட்சியை பிடித்திருக்கலாம்.. ஆர்கே.நகரிலாவது விட்டதை பிடித்திருக்கலாம்.. இப்படி ஒவ்வொன்றாக கோட்டை விட்டு, இப்போது தகுதி நீக்கம் என்ற விஷயத்தை நம்பி உள்ள நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
சந்தேகம் எழுகிறது
அதனால், எப்படியும் உள்ளடி அல்லது திரைமறைவு வேலைகளில் இறங்கி உள்ளது என்றே தெரிகிறது. குறிப்பாக மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான அளவு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தலாம்.. அதற்கான முயற்சிகளில் திமுக இறங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் துரைமுருகன் பேச்சு அப்படி இருக்கிறது.
பதவி பறிபோகும்
இல்லையென்றால், எம்எல்ஏக்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் ஏதாவது முயற்சியிலும் இறங்கலாம். அப்படி அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவு தருவதாக வைத்து கொண்டால், எப்படியும் பதவி பறிபோகும். ஒருவேளை பதவி பறிபோனால் அவர்களுக்கு அமைச்சர் பதவியே தூக்கி தந்து நன்றி கடன் செலுத்தவும் திமுக தயாராகவே இருக்கும்!
பாஜக கூட்டணி
இதுபோக துரைமுருகன் ஒரு பக்கம் களம் இறக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் மறுபக்கம் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் கூட இதுபோன்ற வேலைகளில் இறக்கப்படலாம் என்ற செய்தி அடிபடுகிறது. செந்தில்பாலாஜி போன்ற வலிமை மிக்கவர்களிடம் சில அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல இணக்கத்தில் உள்ளதும் சாதகமாக பயன்படுத்தி கொள்ளப்படலாம். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியால் அதிருப்தியில் உள்ளவர்களும் திமுக பக்கம் வர யோசனையில் இருக்கலாம்.
திமுகவின் அஸ்திரங்கள்
இப்படி பல காரணங்கள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதால்தான் துரைமுருகனால் சவால் விட முடிந்தது. மொத்தத்தில் திமுகவுக்குள் என்னமோ வேலை நடக்கிறது.. ஆனால் என்ன என்றுதான் வெளியே தெரியவில்லை. எப்படியோ வருகிற மே 23-க்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு புயல் ஆட்டு ஆட்டு என ஆட்ட போகிறது உண்மை!