நம்பி வாங்க தம்பி... அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு ஆள் பிடிப்பு தீவிரம்
சென்னை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக தலைமை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் லட்சக்கணக்கில் புதிய உறுப்பினர்களை இணைத்த நிலையில் இப்போது அதிமுகவும் இளைஞர்களை அதிகளவில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது?!
ஜெயலலிதா தொடங்கியது
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை பொறுத்தவரை ஜெயலலிதாவால் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சி புத்துயிரூட்டும் வகையில் இந்த அமைப்பை உருவாக்கினார் ஜெயலலிதா. குறிப்பாக திமுக இளைஞரணிக்கு போட்டியாக அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்டன. இதனிடையே இந்த அமைப்பை தற்போது வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாசறை செயலாளர்
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தொடங்கப்பட்ட போது அதன் முதல் மாநில செயலாளராக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். இவர் டிடிவி தினகரனின் மைத்துனர், அதாவது சசிகலாவின் மூத்த அண்ணன் மகன். சில காலம் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் டாக்டர் வெங்கடேஷ் மீது போயஸ் கார்டனில் குவிந்த புகார்கள் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டு அடுத்தடுத்து வைகைச்செல்வன், கலைச்செல்வன், செந்தில்நாதன், என அண்மையில் பரஞ்சோதி வரை இந்த பொறுப்புகளை வகித்தனர்.
ஆக்டிவ் செயல்பாடு
திமுக இளைஞரணிக்கு போட்டியாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அவரது மறைவுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் ஆக்டிவாக இல்லை. இதனிடையே அந்த நிலையை மாற்றி பாசறையில் அதிகளவில் இளைஞர்களையும், இளம் பெண்களையும் சேர்த்து அமைப்பை வலிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வேடசந்துர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிமுக தலைமை.
சுறுசுறுப்பானவர்
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை பொறுத்தவரை அரசியலில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். மருத்துவரான இவர் முன்னாள் துணை சபாநாயகர் பாலசுப்பிரமணியனின் மகன் ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாசறை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பரமசிவம் தமிழகம் தழுவிய அளவில் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளார்.