எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
சென்னை : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் மிக தீவிரமாக உலக நிகழ்வுகளை உற்று கவனித்து வருகிறார்கள். அதிலும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைவரும் போட்டி போட்டிக் கொண்டு சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் போன்றோர் தான் தங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் டுவிட்டரில் பதிவிடுவதுடன், சர்வதேச நிகழ்வுகள் முதல் உள்ளூர் பிரச்சனை வரை அனைத்திற்கும் கருத்து பதிவிட்டு, அனைவரின் கவனத்தையும் டுவிட்டர் பக்கம் திருப்பி வந்தனர்.
முதல்வர் முதல் சீமான் வரை :
ஆனால் சமீப காலமாக, அதிலும் தமிழகத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது முதல் தமிழக முதல்வர் தொடங்கி, அவ்வப்போது டிவிக்களில் தலை காட்டும் சீமான், ஹச்.ராஜா, சரத்குமார் வரை அனைவரும் போட்டி போட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.
நாங்களும் சொல்லுவோம் :
பிரதமர் பாணியை பின்பற்றி தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் சர்வதேச நிகழ்வுகளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்தியா வீழ்த்தியது, அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்றதற்கு வாழ்த்து சொல்வதில் துவங்கி, உள்ளூரில் பொங்கல் வாழ்த்து, திருவள்ளுவர் தின வாழ்த்து, பென்னிகுயிக் பிறந்தநாள், டாக்டர் சாந்தா மரணம், பேரறிவாளன் விடுதலை குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது என எதையும் விட்டு வைக்காமல் கணக்கில்லாமல் டுவீட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் முகம் தெரியாத பல விடுதலை போராட்ட வீரர்களின் பிறந்தநாள், நினைவு நாளை குறிப்பிட்டும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சினா சும்மாவா :
ஆளுங்கட்சியில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் தான் தாங்கள் தினமும் செல்லும் இடங்களில் எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள், தங்களை சந்திக்க வருபவர்களுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை உடனுக்குடன் அப்டேட் செய்து விடுகிறார்கள் என்றால் எதிர்க்கட்சியினரும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது, ஆளுங்கட்சியை வசை பாடுவது, அறிக்கை வெளியிடுவது என எல்லாமும் டுவிட்டரில் தான்.
கனிமொழி தனிவழி :
திமுக தலைவர் தினமும் ஊர் ஊராக சென்று பங்கேற்கும் கிராமசபை கூட்ட வீடியோக்கள், அறிக்கைகளை உடனுக்குடன் அப்டேட் செய்கிறார். இதில் திமுக எம்.பி., கனிமொழி ஒருபடி மேலே போய், சமீபத்தில் நாகர்கோவில் ஓட்டல் ஒன்றில் தான் சாப்பிடும் போட்டோவை கூட பதிவிட்டு, கருத்து கூறி உள்ளார்.
அமைதியான ரஜினி,கமல் :
சில வாரங்களுக்கு முன் வரை ஏதாவது கருத்து, வீடியோ பதிவிட்டு வந்த மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல், சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒருநாளைக்கு ஒரு டுவீட் போடுவதே அரிதாகி விட்டது. இவர் இப்படி என்றால், கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டது முதல் சில நாட்கள் அடுத்தடுத்து சில வீடியோக்கள், கருத்துக்களை பதிவிட்டு வந்த ரஜினி, டாக்டர்கள் அறிவுரை காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என அறிவிப்பு வெளியிட்ட பிறகு எந்த டுவீட்டும் செய்யவில்லை. கடைசியாக பொங்கல் வாழ்த்துக்களை மட்டுமே அவர் பதிவிட்டுள்ளார்.