கே.எஸ்.அழகிரி ஒரு கூமுட்டை... அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு கூமுட்டை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் தரம்தாழ்ந்து விமர்சிப்பது அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் என்ற முறையில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தவரை அரசியல் நாகரீகத்தை கடைபிடித்து அறிக்கை வாயிலாக பதிலடி தருவது வழக்கமாக இருந்து வந்தது.
மேலும், அவர்கள் காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை பற்றியோ, உறுப்பினர்களை பற்றியோ மைக் கிடைத்தது என்று கண்ட இடத்தில் எல்லாம் கருத்துக்கூறியது கிடையாது. வார்த்தைகளை பிரயோகம் செய்வதில் மிக மிக கவனமுடன் இருந்தார்கள்.
தனிமனித தாக்குதல்
அண்மைக்காலமாக தமிழக அரசியல் களத்தை சற்று உற்றுநோக்கி கவனித்தோம் என்றால் ஆளுங்கட்சியாக இருக்கட்டும், எதிர்க்கட்சிகளாக இருக்கட்டும் வாய்க்கு வந்ததை வசைபாடி வருகின்றனர். மேடைப்பேச்சுகளில் தனி மனித தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது வெறுப்புணர்வை தூண்டி தீராத பகையை ஏற்படுத்தும் வரை கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.
முன்னுதாரணம்
வடமாநிலங்களிலோ, குறிப்பாக டெல்லியிலோ நீங்கள் கவனித்திருந்தால் தெரியும் அரசின் செயல்பாடுகளை பற்றி மட்டும் தான் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுமே தவிர தனிமனித விமர்சனங்களை முன்வைக்காது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இன்னதெல்லாம் செய்திருக்கிறோம் என ஆளுங்கட்சியும் நாகரீக முறையில் பதில் தரும்.
விமர்சனம்
ஆனால் நம்ம தமிழ்நாட்டில் மட்டும் தான் நாகரீகமற்ற வார்த்தைகளை கொண்டு தனி மனித விமர்சனத்தை முன்வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக ஒரு அமைச்சர் ஒரு எம்.பியை. பார்த்து பொதுவெளியிலில் பன்னிக்குட்டி என விமர்சிக்கிறார் என்றால் தமிழக அரசியல் எதை நோக்கிச்செல்கிறது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.
தெரியவில்லை
இந்நிலையில் வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை கூமுட்டைஎன விமர்சித்திருக்கிறார். நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்கு அழகிரி என்ன சொல்லி பதில் தரப்போகிறாரோ தெரியவில்லை.