கஜா வர்றாண்டா.. தமிழகத்துக்கு நவம்பர் 15-இல் ரெட் அலர்ட் வார்னிங்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. அது தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் வரை பரவியுள்ளது.
[சென்னை மக்களே உஷார்... நவ. 14 முதல் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்! ]
கரையை கடக்கும்
இதனால் வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு கஜா என பெயரிட்டுள்ளது. இது வரும் 15-ஆம் தேதி கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை
கஜா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். குறிப்பாக வடதமிழகத்தில் அதிக மழை பெய்யும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
ரெட் அலர்ட்
இந்த புயல் 15-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கரையை கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அக்டோபர் 8-ஆம் தேதி ரெட் அலர்ட் விடுத்துவிட்டு பின்னர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
|
மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்
2015-ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதுபோல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறுவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.