செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு வெகுவாக குறைப்பு- 500 கன அடி திறப்பு.. ஒரே இரவில் மாறிய காட்சி!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு நேற்று இரவு விநாடிக்கு 9000 கன அடியாக இருந்த நிலையில் இன்று 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதி நீர்வரத்துக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்து இன்று காலை வெகுவாக குறைந்துள்ளதால் நீர் திறப்பும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து அடையாறு கரையோர மக்கள் உடனடியாக வெளியற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோர பகுதிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த மழையால் இரவோடு இரவாக 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே பெரிய அளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியை நேற்று திறக்கும் அதிக கவனத்துடன் அதிகாரிகள் ஆய்வு செய்து படிப்படியாக திறந்துவிட்டனர். 24 அடி கொள்ளவு உள்ள ஏரியில் 22 அடியை எட்டிய உடன் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீரும், அதன்பிறகு 1500 கனஅடி நீரும் திறக்கப்பட்டது.
அதன்பிறகு 4.30மணி அளவில் 3 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி அளவில் ஏரிக்கு 6500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இரவு 7 ஆயிரம் கனஅடி நீரும், அதன்பிறகு 9 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது. அதன்பிறகு 7000 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 5,016 கன அடியில் இருந்து 1500 கனஅடியாக குறைக்கப்பட்டது. பின்பு 1000 கனஅடியாக குறைக்கப்பட்ட தண்ணீர் தற்போது 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது..ஒரே இரவில் 9000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது