சென்னையில் சாதிக் பாட்ஷா மனைவி கார் மீது சரமாரி தாக்குதல்.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்
Recommended Video
சென்னை: சாதிக் பாட்ஷா மனைவி ரெஹ்னா பானு, கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இந்த சூழலில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு வெளியாகியது.
பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்.. கூவத்தூரில் கொடூரம்
நினைவு தினம்
இந்த மர்ம முடிச்சுகள் அவிழாத நிலையில், சில தினங்கள் முன்பாக சாதிக் பாட்ஷாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தார் நாளிதழ்களில் அஞ்சலி விளம்பரம் கொடுத்திருந்தனர். அதில், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதற்கு சாதிக் பாட்ஷா உதாரணமாகிவிட்டதாக, வரிகள் இடம் பெற்றிருந்தன. இந்த அஞ்சலி போஸ்டர்கள் சென்னை நகரின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டன.
சென்னையில் தாக்குதல்
இந்த நிலையில், சாதிக் பாட்ஷா மனைவி ரெஹ்னா பயணித்த கார் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகர் அளித்த ரெஹ்னா பானு, பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று இரவு, அசோக் நகரிலிருந்து துரைப்பாக்கம் சென்றபோது, இரவு 10 மணியளவில், துரைப்பாக்கம் சிக்னலுக்கு சிறிது முன்னால் எங்கள் கார் மீது திடீரென கல் வீசப்பட்டது.
விளம்பரம்
கணவரின், நினைவஞ்சலி விளம்பரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதால் எனக்கு பயமாக உள்ளது. கண்ணாடி உடைந்ததும் காரை நிறுத்தாமல் நாங்கள் சென்றுவிட்டோம். இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என நான் இப்போது சொல்ல பயமாக உள்ளது. எனவே சொல்ல விரும்பவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீண்டும் தாக்குதல்
ரெஹ்னா பானு வழக்கறிஞர், சாரநாத் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாகவே, ரெஹ்னா பானு மற்றும் அவர் குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் அவருக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பிறகு பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் அச்சுறுத்தல் வந்துள்ளது.
நினைவு நாள் விளம்பரம்
நினைவு நாள் விளம்பரம் கொடுத்த 3வது நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் இதன் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. ரெஹ்னா பானு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கமிஷனர் உறுதியளித்துள்ளார். உடனடியாக, கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.