புதிய கல்விக்கொள்கையை தமிழகம் நிராகரிக்க வேண்டும் - முதல்வருக்கு எதிர்கட்சியினர் கடிதம்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள்
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என்று கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மும்மொழி கல்வித்திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழக மாணவர்கள் சமுதாயத்திற்கு எதிரான தேசிய கல்விக்கொள்கை 2020ஐ தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்த தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் தமிழக கல்விக்கொள்கைக்கு எதிரானது. தமிழை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை முன்னிறுத்த வழி வகுக்கக்கூடியதாக இருப்பது வேதனையளிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழக மாணவர் சமுதாயத்தை காவி மய கட்சியின் பக்கமும் பன்முக கலாச்சாரத்திற்கு எதிராகவும் திசை திருப்பும் இந்த தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும், தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையே தொடரும், தமிழ்நாட்டில் தமிழ்நாடு கற்றல் சட்டம் 2006 தொடரும் என்றும் பகிரங்கமாக அறிவித்து அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க விடக்கூடாது என்றும் எதிர்கட்சியினர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கே. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.