1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா
சென்னை: "1 லட்சம் ரூபாய் சம்பளம் தரேன்னு சொன்னாங்க.. எத்தனை லட்சம் தந்தாலும் சரி.. சாப்ட்வேர் வேலை எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன்.. இப்போ கலப்பையை பிடிச்சி, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்" என்று பெருமிதத்துடன் சொல்கிறார் புது பஞ்சாயத்து தலைவர் ரேகா ராமு!
இந்த முறை உள்ளாட்சி தேர்தலே மிகுந்த வித்தியாசமாக நடந்தது.. நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் களம் கண்டனர்.. இவர்களின் வயசு, அனுபவத்தை எல்லாம் பாராமல், அந்தந்த தொகுதி மக்கள் நம்பிக்கை வைத்து இவர்களை வெற்றி பெற வைத்தனர்.
அப்படி வெற்றி பெற்றவர்கள் தங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தன் பணிகளை தொடங்கி உள்ளார் ரேகா ராமு.. எடுத்த எடுப்பிலேயே பொதுமக்களின் கவனத்தை இவர் பெற்று வருகிறார்.
வெற்றி
சென்னை வில்லிவாக்கம் அருகே பாண்டேஸ்வரம் கிராம பஞ்சாயத்து உள்ளது.. இங்குதான் ரேகா ராமு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 37 வயதாகிறது.. இவரது மாமனார் குடும்பம் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம். அதனால் ரேகாவின் வெற்றியும் வெகு எளிதாகவே அமைந்தது. தன்னை எதிர்த்து போட்டியிட்டவரைவிட 265 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஐடி கம்பெனி
இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.. நல்ல சம்பளத்தில் இருந்தவர்.. இவரது கணவர் பார்த்தசாரதியும் சாப்ட்வேர் என்ஜினியர்தான்.. அவருக்கும் மாசம் ஒன்றரை லட்சம் சம்பளம் கிடைத்தது. ஆனால் 2 பேருமே அந்த வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
இயற்கை விவசாயம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலேயே ரேகாவின் முழு கவனமும் இருந்துள்ளது. இதற்காக அவர் "ஃபார்மர் அண்ட் கோ" என்ற ஒரு கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், இவர்களின் பண்ணையில் இயற்கையாக வளர்க்கப்படும் உணவு பொருட்களை சந்தைப்படுத்துகிறது. அதேபோல, விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை சந்தையில் விற்கவும் உதவியாக இருக்கிறது.
கீரை வகைகள்
இந்நிலையில், பஞ்சாயத் தேர்தலில் வெற்றி பெற்று, தன்னுடைய பணிகளை துவங்க போகிறார் ரேகா ராமு.. இதை பற்றி அவர் சொல்லும்போது, "5 வருஷமாகவே இயற்கை விவசாயத்தில்தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். முதலில் கீரை வகைகளை பயிர் செய்தோம்.. இப்போது பாரம்பரிய நெல்வகைகளையும் பயிர் செய்து வருகிறோம்... இப்படி நாங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருவதால், எங்கள் பாண்டேஸ்வரம் பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது.
அதிகாரம்
ஆனால், ஏரிகளில் மணல் திருட்டு நடக்கிறது.. செங்கல் சூளைகள் பெருக ஆரம்பித்துவிட்டன.. இதனால், விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.. எதையுமே அதிகாரம் இருந்தால்தானே செய்ய முடியும். இப்போதுதான் அதிகாரம் எனக்கு கிடைத்துள்ளது.. நிச்சயமாக பாண்டேஸ்வரத்தில் மாற்றங்களை கொண்டு வருவேன்" என்கிறார் பெருத்த நம்பிக்கையுடன்!!
ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்த இந்த புதிய பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.