புயலுக்கு பின்னால் அமைதி இல்லை.. ஆனால் மனிதம் இருக்கிறது.. வலிகளுடன் கடந்து செல்வோம்!
டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழகம் உதவிகள் புரிந்து வருகிறது.
Recommended Video
சென்னை: புயலுக்குப் பின்னால் அமைதி இல்லை.. எல்லாமும் உடைந்திருக்கிறது.. எல்லாமும் சிதைந்திருக்கிறது.. எல்லாமும் உருக்குலைந்திருக்கிறது.. எல்லாமும் சின்னாபின்னமாயிருக்கிறது.. எல்லாமும் நொறுங்கியிருக்கிறது.. எல்லாமும் கேள்விக்குறியாகியிருக்கிறது!!
சிதிலமடைந்து புதைந்து போன வீடுகளிலிருந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. நான்கு சுவற்றுக்குள் வாழ்ந்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றன.
வியர்வை குருதிகள் நிலத்தில் சொட்ட சொட்ட வேரூன்றிய மரங்கள் எல்லாம் இன்றும் ... மொத்த உழைப்பும் ஒரே நாளில் காவு வாங்கப்பட்டிருக்கிறது.
திணறும் மக்கள்
ஒதுங்கி கொள்ள கூரையும் இல்லாமல், படுத்து கொள்ள கோரையும் இல்லாமல் வெட்ட வெளியை அண்ணாந்து பார்த்து வருகின்றனர் டெல்டா மக்கள். வேயப்பட்ட கூரைகள் பிய்த்தெறியப்பட, நட்டப்பட்ட மரங்கள் பிடுங்கியெறியப்பட, எதிர்கால வாழ்வை தொலைந்து போன புயலுடன் சேர்த்தே தொலைத்து விழி பிதுங்கி இருக்கின்றர் மக்கள். யாரை கேள்வி கேட்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
கை நீட்டும் அவலம்
பெற்ற பிள்ளை காப்பாற்றாவிட்டாலும் வளர்த்த பிள்ளை கைவிடாது என்ற நம்பிக்கையில் நட்ட தென்னம்பிள்ளைகள் இன்று தாறுமாறாய் நெளிந்து புதைந்திருக்கின்றன. வாழ்வாதாரமாக திகழ்ந்த வயல்களும் தண்ணீரில் தடம் தெரியாமல் மூழ்கி மக்கி போயிருக்கின்றன. ஊருக்கே படியளந்த மக்கள், யார் எதை கொடுத்தாலும் கை நீட்டும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
யாரை குத்தம் சொல்ல?
பச்சாதாபம் இன்றி பாதி ராத்திரியில் பாழ்படுத்தி விட்டு சென்ற பாதகனையா? ஈவிரக்கமின்றி இரவென்றும் பாராமல் இம்சித்து போன இயற்கையையா? நாதியின்றி, நட்டாற்றில் விடப்பட்ட நிலைமையையா? கைதூக்கி ஓடிவராத ஆளும் வர்க்கத்தையா? 5 நாள் கழித்து 5 நிமிடம் வந்துவிட்டு போன நபர்களையா? யாரை குத்தம் சொல்வது?
கதறும் குமுறல்கள்
பசியால் அழும் குழந்தைகளின் ஓலம் தமிழகத்தின் மூலை முடுக்குகளில், சந்து பொந்துகளில் நுழைந்து காதை துளைக்கிறது. முறிந்தும், உடைந்தும், அழிந்தும், மூழ்கியும், நெளிந்தும், வளைந்தும், கருகியும், சாய்ந்தும் மட்டுமல்லாமல் செத்தும் கிடக்கும் ஜீவன்களை நினைத்து கதறும் குமுறல்கள் விண்வெளியை பிளக்கின்றன.
தாங்கும் தாய்மை
ஆனால் மனிதம் இன்னும் தழைத்து கொண்டு தான் இருக்கிறது. எல்லாம் போனாலும் மனிதம் காலில் சக்கரம் கட்டி அங்கே ஓட துவங்கியுள்ளது. சிதைந்து போன மனதுக்கு மருந்துடன் றெக்கை கட்டி கிளம்பிவிட்டது. எத்தனை பேரிடர்கள் வந்தாலும் மனிதம் எம் இனத்தை காக்கும் என்ற நம்பிக்கை தமிழனுக்கு அதிகமாகவே உள்ளது. பொதிந்துள்ள தாய்மையே வரலாற்றின் அடுத்த பக்கத்திற்கு எம் இனத்தை கை பிடித்து இழுத்து செல்லும். வரலாற்றை வலிகளுடனாவது கடந்து செல்வோம். மீட்டுருவாக்கத்தின் பாதையை அன்புடன் கடப்போம்!!