மணலி... அம்மோனியம் நைட்ரேட்... மிஞ்சியதும் காலி செய்யப்படும்... அதிகாரி தகவல்!!
சென்னை: சென்னை மணலியில் எஞ்சி இருக்கும் அம்மோனியம் நைட்ரேட் இன்னும் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக 15 கன்டெய்னர்களில் அகற்றப்படும் என்று வெடிப்பொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ''சென்னை மணலி கிடங்கில் இருந்து 240 டன் அம்மோனியம் நைட்ரேட் இதுவரை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்துக்கு 12 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 9ஆம் தேதி 10 கன்டெய்னர்களில் 181.70 டன் அம்மோனியம் நைட்ரேட் அனுப்பப்பட்டது. இன்னும் எஞ்சி இருக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை இறுதி கட்டமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் 15 கன்டெய்னர்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து அகற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்ரூட்டில் ஒரு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 160 பேர் உயிரிழந்தனர். 6000 பேர் காயம் அடைந்தனர். இது அந்த நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சரவையை கலைத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக பிரதமர் ஹசன் தியாப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை, மணலியில் இருக்கும் கிடங்கில் 740 டன் அளவிற்கான அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக தகவல் வெளியானது. தென்கொரியாவில் இருந்து அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை இருக்குமதி செய்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், கிடங்கில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சர்ச்சை கிளம்பியதை அடுத்து துறைமுகம் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட்டு இருந்தது. ஐதராபாத்தில் இருக்கும் நிறுவனம் ஒன்று இதை ஏலத்தில் எடுத்து இருக்கிறது.
சீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது!
ஐதராபாத்தைச் சேர்ந்த சால்வோ எக்ஸ்புளோசிவ் அண்ட் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் ஏலம் எடுத்து இருக்கிறது. விவசாய உர பொருட்கள் தயாரிக்க அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் நெருப்பு தொடர்பு ஏற்பட்டால் பயங்கரமாக வெடித்து சிதறும் தன்மை கொண்டது.