அக்டோபர் 2.. தேசம் காத்த தலைவர்களின் நாள்!
சென்னை: அக்டோபர் 2 -தேசப்பிதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல நம் தேசத்தின் தலைசிறந்த மாமனிதர் லால் பகதுார் சாஸ்திரியின் பிறந்தநாளும் ஆகும்.
1904ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் மொகல்சாரி என்ற கிராமத்தில் சாரதா ஸ்ரீவத்சவா ராம்துலாரி தேவி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நாட்டின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தன் பதினாறு வயதில் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பைத் துறந்து முழு நேரமாக மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். பிறகு அங்குள்ள காசி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொள்கைகளைப் பயின்று காந்தியடிகளின் கையால் சாஸ்திரி என்ற பட்டம் பெற்றார். காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற போது ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்திரப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கடின உழைப்பாலும் தனித்திறமையாலும் நேருவின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது ஒரு ரயிலில் ஏற்பட்ட விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார். அவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த போது அவருடையக் கட்சி 1952,1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றது. முப்பது ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கை.
பாரத ரத்னா விருதுக்குச் சொந்தக்காரர். சுதந்திர இந்தியாவின் தலைச்சிறந்த இரண்டாவது பிரதமராவார்.இந்தியா சீனா இடையே டாஷ்கன்ட் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போரைத் தடுத்தவர். கடின உழைப்பு பிரார்த்தனைக்குச் சமம் என்று கூறியவர். காந்தியடிகளின் கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர். 1966ஆம் ஆண்டு பாரதத்தின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மகாத்மா காந்தியை நினைவு கூறும் அதே நாளில் லால் பகதூர் சாஸ்திரியையும் மனதில் ஏந்தி நன்றி சொல்லுவோம்.
- உமா.ஜி