ரெப்கோ வங்கி டெபாசிட் விவகாரம்.. தீர்ப்பை தள்ளி வைத்தது ஹைகோர்ட்
சென்னை: ரெப்கோ வங்கியில் தாயகம் திரும்பியோர் அல்லாத உறுப்பினர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து டெபாசிட் பெறுவதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
பர்மா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்தவர்களின் நலனுக்காக கடந்த 1969 ஆம் ஆண்டு ரெப்கோ வங்கி உருவாக்கப்பட்டது .
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு இல்லாத கூட்டுறவு சங்கங்களில் ஓட்டுரிமை உள்ள உறுப்பினர் தவிர மற்ற யாரிடமும் டெபாசிட் பெறுவதை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், விதிகளை மீறி தாயகம் திரும்பியோர் அல்லாதவர்களிடம் டெபாசிட் பெறுவதை எதிர்த்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த எல்.பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் புதிய வழக்கு
இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன், முன்பு விசாரணைக்கு வந்தபோது, வங்கி நிர்வாகிகள் தேர்தலில் தாயகம் திரும்பியோர் மட்டுமே ஓட்டுரிமை இருந்து வந்த நிலையில், வங்கியின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பொது மக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கி டெபாசிட் பெறப்படும் என ரெப்கோ வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் இசபெல்லா அறிவித்துள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், முறையான விதிகளை பின்பற்றாமல் தாயகம் திரும்பியோர் அல்லாதவர்கள் மூலமாக சுமார் 7,600 கோடி ரூபாய் வரை வங்கியில் டெபாசிட் பெறப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.