மிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்!
Recommended Video
சென்னை: எந்த வருடமும் இல்லாத ஸ்பெஷல்ஸ் இந்த முறை குடியரசு தின கொண்டாட்டத்தில் காண முடிகிறது.. டெல்லியில் நடந்த இந்த ஹைலைட்ஸ்தான் இப்போதுவரை மக்களால் பேசப்பட்டு வருகிறது!
இந்திய தேசம் தனக்கென சொந்தமான அரசியல் சட்ட திட்டங்கள், ராணுவ வலிமை, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.. இதற்கு எத்தனையோ தலைவர்களின் ரத்தம் காவு வாங்கப்பட்டுள்ளது... அவர்களின் கருத்துக்கள், சிந்தனைகள் இன்றுவரை நிலைத்து நின்று வழிகாட்டி வருகின்றன.
இந்த கொண்டாட்டத்தினை ஜனவரி 26 குடியரசு தினத்துடன் சேர்த்து கொண்டாடி வருகிறோம்.. ஏனெனில் ஜனநாயகம் என்ற வார்த்தையின் அடிநாதத்தை ஒவ்வொருவருக்கும் நாடி நரம்புகளில் புகுத்தியதும், புகுத்துவதும், இந்த நாள் என்றே சொல்லலாம்.. !
குடியரசு தலைவர்
இந்த நாளை சிறப்பிக்கவே ஒவ்வொரு வருடமும் நாட்டிற்காக உழைத்த தியாகிகள், சேவை புரிந்தவர்கள், வீரசாகசம் நிகழ்த்தியவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். குடியரசு தலைவர் முன்பு நடத்தப்படும் முப்படைகளின் அணிவகுப்பு முதல், பதக்கங்கள், விருதுகள் வழங்கப்படும்வரை எதுவும் நேரு காலத்தில் இருந்து இன்றுவரை மாறவில்லை.. இது மிக முக்கியமான வரவேற்கத்தக்க ஒன்றாகும்!
பிரதமர் மோடி
ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் இதில் கொஞ்சம் வித்தியாசத்தை பார்க்க முடிகிறது.. புதுமைகள் கண்களுக்கு தென்படுகின்றன.. குறிப்பாக இதுவரை இந்த விழாவுக்கு பிற நாட்டினரை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்.. இதில் நம்மை அடிமைப்படுத்திய சில நாடுகளின் தலைவர்களும் அடக்கம்.. ஆனால், மோடி ஆட்சியில் இது துடைத்தெறியப்பட்டுள்ளது. எந்த நாடு இந்தியாவுக்கு வலிமை தந்ததோ.. அல்லது கைதூக்கி தந்து உதவுகிறதோ அந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அது சின்ன நாடாக இருந்தாலும் சரி.. அதற்கு உதாரணம்தான் போன வருடம் தென்னாப்பிரிக்க அதிபர் வந்துபோனதும், இந்த வருடம் பிரேசில் அதிபர் பொல்சனாரூ என அழைக்கப்பட்டதும்!
பாரம்பரியம்
அதேபோல, ஒவ்வொரு மாநில கலாச்சாரத்தினை வெளிப்படுத்தியபடி பள்ளி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி செல்வர்.. கலாச்சாரம், பாரம்பரியங்களின் கண் கவர் ஊர்வலங்களும் நடைபெறும்.. அந்த வகையில் இந்த முறை நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது நம் ஐய்யனார்தான்.. தமிழகம் கடவுள் என்றாலும் சிறு கடவுளான, அதிலும் கிராமப்புற கடவுளான ஐய்யனாரை நினைவுகூர்ந்தது அற்புதமான ஒன்று.
சர்ச்சைகள்
ஆனால், இதற்கான ஒத்திகைகள் நடந்தபோதே, தமிழக அரசு சார்பாக இருந்த வாகனத்தில் உள்ள அய்யனார் சிலைக்கு பூணூல் போடப்பட்டதாக சர்ச்சை எழுந்து.. இது விவாதப் பொருளாகவும் உருவானது! ஆனால், "இந்த அய்யனாரானது, சிவன் அம்சம் கொண்டது... கையில் உடுக்கையுடன் காணப்படுவது இதன் தனி சிறப்பு. இது சிவன் அம்சம் என்பதால், இந்த சிலைக்கு பூணூல் அணிவிக்கலாம்" என்ற விளக்கமும் விழுந்தது!
லடாக்
வழக்கமாக இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள், இந்த முறை சாணக்கியபுரி பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்கியது அட்டகாசமான துவக்கமாகும். போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியதை கூடுதல் அம்சம்!! குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் லடாக் பனிமலையில் தேசிய கொடியை ஏற்றினர். சுமார் 17,000 அடி உயர்த்தில் உள்ள லடாக்கில் இப்போது மைனஸ் 20 டிகிரி செல்சியல் வெப்பநிலை உள்ளது.. எனினும் வெள்ளை உடையணிந்த 20க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர்கள் நம் தேசிய கொடியுடன் பனிமலையில் அணிவகுப்பு நடத்தியதுடன் "வந்தே மாதரம்" என்று உற்சாகத்துடன் முழங்கியது நாட்டு மக்களை சிலிர்க்க வைத்தது.
சாகசம்
16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பல்வேறு அமைச்சர்கள், துறைகள் என மொத்தம் 22 மாதிரி வடிவங்கள் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன... ராணுவத்தின் போர் பீரங்கியான பீஷ்மா, காலாட்படையின் போர் வாகனமான பால்வே இயந்திரத்தின் பிகேட், விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியன முதல் முறையாக பார்வைக்கப்பட்டன.. திரிசூல் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களும் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றன. இது நம் நாட்டின் பலத்திற்கு சான்றாக தெரிந்தது. முதல் முறையாக ராணுவத்தில் பெண்களின் ஆற்றலையும், ஆளுமையையும் பறைசாற்றும் வகையில் சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் பைக் சாகசம் செய்தது காண்போரை பரவசம் அடைய செய்தது.
ரோஹித் வெமுலா
இது எல்லாவற்றையும்விட, தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் வெமுலாவின் தாயாரும், மதுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் மத வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஜூனைத் கான் பாட்டியும், இணைந்து தேசிய கொடியை டெல்லியில் மக்கள் மத்தியில் ஏற்றியது நாட்டு மக்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.. தங்களுக்கு தெரிந்த வகையில் தேச பக்தியை வெளிப்படுத்திவரும் நாட்டு மக்களை பெரிய சல்யூட் அடித்தே வரவேற்கலாம்!