அரசியலா பண்றீங்க.. எங்க கிட்ட எடுபடாது.. 7.5% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகும்.. முதல்வர் அதிரடி
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மற்றும் 58 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தேவர் தொடர்பாக அதிமுக அரசு செய்த மரியாதைகளை பட்டியலிட்டார். மருத்துவ மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றியும் பேசினார்.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி! அதிமுக அரசு செய்த மரியாதைகளை பட்டியலிட்டு பேட்டி
ராமநாதபுரம் நலத் திட்டங்கள்
பசும்பொன்னில் நிருபர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: ராமநாதபுரம் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு அரசு ஊக்கம் கொடுக்கிறது. காவிரி குண்டாறு திட்டத்தை ராமநாதபுரத்தில் செயல்படுத்துவோம். ராமநாதபுரத்தில் தான் அதிக ஏரிகள் நிரப்பப்படுகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை காப்பது அதிமுக அரசு மட்டும் தான். ஏழை எளிய மாணவர்கள் நலனுக்கு அதிமுக அரசுதான் முன்னிலையில் நிற்கிறது.
இந்த ஆண்டே அமல்
எம்பிபிஎஸ் இடங்களில், அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட மசோதாவை நிறைவேற்றினோம். ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால், எங்கள் அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டே, இந்த உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
ஏழைகள் நலன் காக்க
அதிமுக அரசுதான் ஏழை, எளிய மாணவர்கள் நலனுக்காக துணை நிற்கிறது. பெரும்பாலும் கிராமத்தில் இருக்கக்கூடியவர்கள் ஏழை எளிய மாணவ மாணவிகள் தான். அவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களும் மருத்துவ படிப்பை படிக்க வேண்டும். அந்த கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு முயற்சி எடுத்துள்ளோம்.
நான் அரசு பள்ளி மாணவன்
நான் கூட அரசு பள்ளியில் படித்த மாணவன்தான். எனவே அவர்கள் உணர்வை மதித்து தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டி உள்ளோம். இப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, கிராமங்களில் இருப்பவர்கள் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உள் இட ஒதுக்கீடு சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.
அரசியல் எடுபடாது
ஆளுநர் காலதாமதம் செய்ததால், அதை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இந்த அரசியல் எடுபடாது. ஜெயலலிதாவின் அரசு எதை கொண்டு வந்தாலும் நிறைவேற்றியே தீரும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்தார்.