எஸ்.பி.ஐ. வங்கி கிளார்க் பதவிகளுக்கான கட்- ஆப் மதிப்பெண்களில் சமூக அநீதி... வலுக்கும் கண்டனங்கள்!
சென்னை: எஸ்.பி.ஐ. வங்கி நடத்திய கிளார்க் பதவிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களில் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டும் மிக குறைவான கட் ஆப் மதிப்பெண் ஒதுக்கீடு செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே போன்று உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு நெறிமுறைகள் மீறல்
அதாவது, பொதுப் பிரிவு 61.75 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் 61.75 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட ஏழைகள் 61.75 விழுக்காடும், பழங்குடியினருக்கு 57.25 விழுக்காடும், உயர்சாதி ஏழைகள் 47.75 விழுக்காடும் அளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் படி, அவ்வங்கி இட ஒதுக்கீடு நடைமுறைகளை மீறியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட ஏழைகள் ஆகிய பிரிவினருக்கு, ஒரே விழுக்காட்டில் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது எந்த வகையில் நியாயம்?. அதை விட உயர்சாதி ஏழைகள் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக உள்ளது. அதாவது, 47.75 விழுக்காடு மட்டுமே.
மனசாட்சியே இல்லையா?
இந்தக் கட் ஆஃப் விவரங்கள் சமூக யதார்த்தங்களோடு பொருந்துமா என எண்ணிப் பார்த்தால், பாரத ஸ்டேட் வங்கி இட ஒதுக்கீடு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும். மேலும், பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும்போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்களா?. அந்த நெறி கடைப்பிடிக்கப்படுமா?. பழங்குடியினரை விட, உயர்சாதி ஏழைகளுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் விழுக்காட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இது தான் பாரத ஸ்டேட் வங்கியின் மனச்சான்றா?. கிராமம் மற்றும் நகரப்புறங்களில் வாழுகின்ற உயர்சாதி ஏழைகளை விட, மலைக்கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி கருதுகிறதா?.
தேவை விசாரணை
எனவே, தற்போது ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள விபரங்கள், பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனென்றால், ஸ்டேட் வங்கி தொடர்ந்து இட ஒதுக்கீடு நெறி முறைகளை கடைப்பிடிப்பதில்லை. இட ஒதுக்கீடு முறையில் பாரத ஸ்டேட் வங்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது. அதனால், இவ்விவகாரம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்க வேண்டும். அதோடு, ஸ்டேட் வங்கியின் இட ஒதுக்கீடு மீறல் குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உரிய விசாரணை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியுள்ளதாவது: EWS இட ஒதுக்கீடு அப்பட்டமான மோசடி. அது இட ஒதுக்கீட்டை சாதியை அடிப்படையாகக்கொண்ட சமூகப் பிரச்சனை என்பதிலிருந்து மாற்றி வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரப் பிரச்சனையாக ஆக்குகிறது. அது ஒழிக்கப்படவேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேர்வில் EWS இட ஒதுக்கீட்டின் கட் ஆஃப் குறைவாக இருக்கிறது. அந்த இட ஒதுக்கீடு அநீதி என்பதற்கு அதுவே சாட்சி. விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளாலும் தனி நபர்களாலும் EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு அவை உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளன. அந்த வழக்குகளை விசாரிக்க இப்போதாவது உச்சநீதிமன்றம் முன்வரவேண்டும். அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக்கொள்வதோடு விசாரணையை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தவேண்டும்.
இதுதான் சமூக நீதியா?
எஸ்பிஐ தேர்வில் தமிழ்நாட்டுக்கான புள்ளி விவரங்களில் EWS Quota இல் தேர்வானவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது மட்டும்தான் சுட்டிக்காட்டப்படுகிறது. OBC, General ஆகிய பிரிவுகளின் கட் ஆஃப் மதிப்பெண்களும் (61.25) SC பிரிவினர் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்ணும் (61.25) ஒன்றாக இருக்கிறதே அது எதைக் காட்டுகிறது? உத்தரப் பிரதேசத்தில் SC க்கும் OBC க்கும் கட் ஆஃபில் 11.50% வேறுபாடும், மத்தியப் பிரதேசத்தில் 10.25% வேறுபாடும் இருக்கும்போது தமிழ்நாட்டில் ஒரே அளவாக இருக்கிறதே! SC பிரிவினருக்கும் OBC, General பிரிவினர்களுக்கும் இடையே வருமானத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கும்போது கட் ஆஃபில் எப்படி ஒரே மதிப்பெண் இருக்க முடியும்? இது சமூக நீதியா ? இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.